சிவலிங்கத்துப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்!

இறைவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்பது பழமொழி. ஆனால், உண்மையிலேயே இறைவன் தூணில் உறைந்துள்ள அதிசய ஆலயம் மலை மாவட்டமான நீலகிரியில் உள்ளது.
சிவலிங்கத்துப் பதிலாகத்  தூணை வணங்குகிறார்கள்!
Updated on
2 min read

இறைவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்பது பழமொழி. ஆனால், உண்மையிலேயே இறைவன் தூணில் உறைந்துள்ள அதிசய ஆலயம் மலை மாவட்டமான நீலகிரியில் உள்ளது.
 சிவாலயம் என்றால், அங்கு வழிபாட்டுக்குச் சிவலிங்கம் இருக்கும். ஆனால், நாட்டிலேயே நீலகிரியிலுள்ள இந்த சிவாலயத்தில் மட்டும்தான் சிவலிங்கத்துக்குப் பதிலாக தூணை வணங்குகின்றனர். அதுவும், இந்தத் தூணை நேருக்கு நேர் பார்க்கக் கூடாது. ஓரத்தில் நின்றே வணங்க வேண்டும். வருடத்தில் பங்குனி மாதம் 23ஆம் தேதியன்று ஒருநாள் மட்டும் இரவு நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு திறக்கப்படும் இந்தத் தூணை நேருக்கு நேராக நின்று வணங்கலாம்.
 ÷தமிழகத்தின் எல்லையான நீலகிரி மாவட்டத்தில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் சந்திக்கும் மும்மாநில சந்திப்பு பகுதியான கூடலூர்} நெம்பாலக்கோட்டையில் அமைந்துள்ள இந்தச் சிவாலயம் பிரசித்தி பெற்ற சிவாலயமாகும். 3 மாநில கட்டிட முறைப்படியும் இக்கோவில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. இந்தக் கோவில் தொடர்பாக, கூடலூரைச் சேர்ந்த டாக்டர் நடராஜன் நம்மிடம் தெரிவித்த தகவல்கள்:
 ÷""அர்ஜுனன் பாசுபத வரம் வேண்டி தவமிருந்துபோது, அவனது தவத்தை பரிசோதிக்க வேடன் வடிவில் சிவபெருமான் வந்தாராம். அப்போது அவனது தவத்தை மெச்சி, அர்ஜுனனுக்கு வில், அம்புடன் வேட்டைக்காரன் போல அவர் காட்சியளித்த இடமே கூடலூர் அருகேயுள்ள நெம்பாலக்கோட்டையாகும். அர்ஜுனனுக்கு காட்சியளித்த பின்னர், அங்கிருந்த தூணில் சிவபெருமான் மறைந்துவிட்டாராம். அப்போதிலிருந்து அந்த தூணையே சிவபெருமானாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதிலும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர், தங்களது குலதெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர். சிவபெருமான் தூணில் மறைந்த சம்பவம் அங்கிருந்த சிலருக்கு மட்டுமே தெரிந்ததால், அனைத்து பக்தர்களுக்கும் தெரிவதற்காக அருகிலுள்ள மலை உச்சிக்கு சென்று அமர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 அங்குள்ள கோயிலிலிருந்து பார்த்தால், கூடலூர் பகுதி முழுவதும் தெரியும். இன்னமும் கூடலூரில் நடத்தப்படும் புத்தரி திருவிழாவின்போது அறுவடை செய்யப்படும் முதல் நெல் சிவபெருமானுக்கே காணிக்கையாக வழங்கப்படுகிறது.
 ÷இது சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இக்கோயிலுக்கு நீலகிரி மலையிலிருந்த பழங்குடியினத்தவரும், நஞ்சநாடு மற்றும் கவ்வட்டி பகுதிகளிலிருந்து படகர் இனத்தவரும் சென்று வழிபாடு நடத்தியதாக குறிப்புகளும் உள்ளன. முற்கால சேர மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில், 1853 ஆம் ஆண்டிலிருந்து நிலம்பூர் மன்னர் வசம் இருந்துள்ளது. இக்கோயிலைச் சுற்றிலும் கோட்டையும், அகழியும், குளமும் உள்ளன.
 இக்கோயிலைக் குறித்தும், அதன் சிறப்புகளைக் குறித்தும் ஹட்சன் என்ற ஆங்கில எழுத்தாளர், தனது "தி நீல்கிரிஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப்போலவே நீலகிரியைச் சேர்ந்த சிலரும், இக்கோயிலைக் குறித்து குறிப்புகளை எழுதியுள்ளனர்.
 ÷இக்கோயிலுக்கு வழிபாடு நடத்த தமிழகத்திலிருந்து மட்டுமின்றி, கேரளத்தில் இருந்தும், கர்நாடகத்தில் இருந்தும் மக்கள் வருகின்றனர். இதன் காரணமாகவே திருவண்ணாமலைக்கு அடுத்தாற்போல, இக்கோயிலிலும் பெüர்ணமி நாள்களில் கிரிவலம் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் வசமிருந்த இக்கோயில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது'' என்கிறார் நடராஜன்.
 இந்தக் கோயில் குறித்து கேள்விப்பட்ட தமிழக அரசின் சுற்றுலாத்துறையும் இக்கோயிலை ஆன்மிக சுற்றுலாவுக்கான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. அதேபோன்று, இக்கோயில் அமைந்துள்ள பகுதி வனப்பகுதி என்பதால், சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு உகந்த இடமாகவும் இப்பகுதி உருவாக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுற்றுலா அலுவலர் டி.துரைராஜ் தெரிவித்
 துள்ளார்.
 மலைமாவட்டமான நீலகிரி மாவட்டம் இயற்கை, சுற்றுலா போன்ற பல்வேறு அம்சங்களிலும் பிரசித்தி பெற்றிருந்தாலும், ஆன்மிகத்திலும் புகழடைந்துள்ளது. ஆன்மிக வாதிகளிடத்திலும் நீலகிரிக்கு மேலும் ஒரு சிறப்பை உருவாக்கித் தந்துள்ளது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com