வித்தியாசமான தலைமையாசிரியர்!

பள்ளிப் பருவத்தில் முக்கியமானது தொடக்கக் கல்வி. எதிர்காலத்தில் எப்படிப்பட்ட முக்கிய பதவிகளுக்கு வந்தாலும், அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பது தொடக்க கல்வி அளிக்கும் ஆசிரியர்களே.
வித்தியாசமான தலைமையாசிரியர்!
Updated on
2 min read

பள்ளிப் பருவத்தில் முக்கியமானது தொடக்கக் கல்வி. எதிர்காலத்தில் எப்படிப்பட்ட முக்கிய பதவிகளுக்கு வந்தாலும், அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பது தொடக்க கல்வி அளிக்கும் ஆசிரியர்களே. ""பள்ளிப் பருவத்தில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் கற்றுக் கொடுத்தால், எதிர்காலத்தில் சமுதாயத்தின் சிறந்த இளைஞர்களாக அவர்களை உருவாக்க முடியும்'' என்ற அடிப்படையில் பிற பள்ளிகளுக்கு முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகிறார் ஒரு தலைமையாசிரியர்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஏபி.அய்யாசாமி. இவர், திண்டுக்கல்லை அடுத்துள்ள ராஜாபுதூர் ராதாசாமி நடுநிலைப் பள்ளியில் கடந்த 15ஆண்டுகளாகத் தலைமையாசிரியர்.

அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு, வழக்கமான பாடத்திட்டங்களோடு, எதிர்கால சமுதாயத்தில் சிறந்த விளங்குவதற்கு தேவையான அனைத்து நற்பண்புகளையும் கற்பித்து வருகிறார். பொய் சொல்வதும், திருடுவதும் குற்றம் என்பதை வாய்மொழியாக கற்பிப்பதை விட, செயல்வழிக் கல்வியாக நடைமுறைப்படுத்தி, பிற பள்ளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார் அவர்.

பள்ளி வளாகத்தில் சுகாதாரமில்லாத தின்பண்டங்களை விற்கக் கூடாது என்று தடை விதித்திருக்கிறார். தன் சொந்த செலவில் பொரிகடலை உருண்டை, பேரீச்சம்பழம், பாதம் பருப்பு, முந்திரி, செர்ரிப் பழம் உள்ளிட்ட ஆரோக்கியமான திண்பண்டங்களை வாங்கி மாணவர்களிடம் கொடுத்துள்ளார். ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட 3 மாணவர்களிடம் விற்பனைப் பொறுப்பை கொடுத்து, அவர்களே செலவு கணக்குகளை நிர்வகித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளார்.

"" இதன் மூலம், வியாபாரத்தில் மேற்கொள்ள வேண்டிய கணக்கு வழக்குகளை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்கு இளம் வயதிலேயே ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. மேலும், பொய் மற்றும் திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடாமல், தங்களிடம் ஒப்படைத்துள்ள தின்பண்டங்களை விற்பனை செய்வதன் மூலம், அந்த மாணவர்களுக்கு சிறந்த ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க முடிகிறது'' என்கிறார் அய்யாச்சாமி.

""விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தில், கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் பரிசு வழங்கப்படும்'' என்கின்றனர் அந்த பள்ளி மாணவர்கள். அதுமட்டுமல்ல, அந்த பள்ளியில் பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கு, அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்கி, மாதந்தோறும் ரூ.100 செலுத்தும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளார். கடந்த ஆண்டு, கட்டச்சின்னான்பட்டி அஞ்சலகத்தில் 45 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குத் தொடங்க ஏற்பாடு செய்துள்ளார்.

3 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு, 5 ஆண்டு காலத்திற்கு அஞ்சலகத்தில் பணம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். நிகழாண்டில் 30 குழந்தைகளுக்கு அஞ்சலகத்தில் பணம் செலுத்தப்படுவதாக, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். இத்திட்டத்திற்கு, அந்த பள்ளியில் பணியாற்றும் 4 ஆசிரியர்களும் நிதி உதவி செய்து வருவதாக கூறுகிறார் அய்யாச்சாமி.

பள்ளிக்கு தேவையான சிறு உதவிகளுக்கு, தனது நண்பர்களை அணுகி நிறைவேற்றி வந்தாலும், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு, புத்தாடை, அவர்கள் விரும்பும் இனிப்பு உள்ளிட்டவற்றை தன் சொந்த செலிவில் வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார்.

""பணி நிறைவு பெற்று பள்ளியிலிருந்து வெளியேறும் போது, ஒழுக்கம், நற்பண்புகள், பிறருக்கு உதவும் குணம் கொண்ட குறிப்பிட்ட இளைஞர்களை உருவாக்கிய மனநிறைவு கிடைக்க வேண்டும் என்பதே தனது ஆசை'' என்கிறார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com