தினமணியும் நானும்: என்னைச் செதுக்கிய தினமணி
1985-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் "பாரதி' என்ற பெயரில் கையேட்டு மாத இதழை காரைக்காலில் தொடங்கினேன்.


1985-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் "பாரதி' என்ற பெயரில் கையேட்டு மாத இதழை காரைக்காலில் தொடங்கினேன்.
இதழை ஆர்வத்தில் தொடங்கினேனே தவிர அந்த இதழுக்கு ஒரு தலையங்கம் அல்லது ஒரு சாதாரண கட்டுரை எழுதக்கூட எனக்கு ஞானம் போதாது. அந்தப் பொறுப்பை ஒரு நண்பரிடம் தான் ஒப்படைத்தேன்.
அறிவை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் நிறைய வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் உந்தியது.
ஆசிரியர் பணி கிடைத்து புதுவை வந்ததும் மாணவர்கள் மத்தியில் நிற்கவும், பேசவும் நூல்களை வாசித்தால் மட்டும் போதாது. ஒரு நாளிதழை வாசிக்க வேண்டும். அன்றாடச் செய்திகள் தேவை என்று ஒரு நாளிதழை வாங்கத் தொடங்கினேன். ஆனால், தினமணியை எப்படி தேர்வு செய்தேன் என்று எனக்கு நினைவில்லை. 1986 முதல் இன்றுவரை நான் தினமணி வாசகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
தினமணி வெளியிட்ட பல இணைப்புகள், மலர்கள், 1999 முதல் வெளியான சிறுவர் மணி வரை எனது நூலகத்தில் பலரும் படிக்கப் பயன்பட்டு வருவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
வாசிப்பு என்பதைப் பழக்கமாக்கிக் கொள்வார்கள். நான் அதைக் கடமையாக்கிக் கொண்டேன்.
சமுதாயம், அரசியல், நாடு, உலகம் என விரிந்து பறந்த செய்திகளைப் பெற, சிந்தனைகளைப் பெற காரணமான தினமணி ஆசிரியர்களான ஏ.என். சிவராமன், இராம சம்பந்தம், கி.வைத்தியநாதன் ஆகியோர்தான் என்றால் மிகையல்ல.
காரைக்காலில் வெறும் நா.சிவநேசனாக இருந்த நான், புதுவையில் பாரதிவாணர் சிவா வாக செதுக்கப்பட்டதற்கு தினமணி தான் காரணம்.
-ஓவியர். பாரதிவாணர் சிவா,
புதுச்சேரி

என் தந்தை தினமணி படிப்பவர். அவர் படித்து முடித்த பின் மற்றவர்கள் படிக்கவும் உதவி செய்தார்.
1949-ஆம் ஆண்டு என் தந்தை என்னை தினமணி படிக்க உற்சாக மூட்டினார். அவர் தூண்டுதலில் தினமணி படிக்க ஆரம்பித்தேன். அப்பொழுது எனக்கு வயது 13. அன்று முதல் தினமணி படித்து வருகிறேன்.
தமிழக முதலமைச்சராக காமராஜர் இருந்த போது பள்ளிகள் இல்லாத கிராமங்களில் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டார். உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்த நான், ஆசிரியர் பயிற்சி பெறாமல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்.
நான் பணிபுரிந்த ஊர் சிறிய கிராமம். அங்கு வாசிப்பவர்கள் தினசரி செய்திதாள் வாங்கிப் படிப்பது அரிதாக இருந்தது. அவ்வூர் மக்கள் பேப்பர் படிக்க ஏதுவாக என் சொந்த பொறுப்பில் தினமணி வாங்கிக் கொடுத்தேன். என்னுடைய செயலால் மகிழ்ச்சியடைந்த அவர்கள் ஆர்வமுடன் தினமணி படித்தார்கள்.
மூன்று ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்தேன். பின்னர் ஊரக வளர்ச்சித்துறையில் பணியில் சேர்ந்தேன். நான் செல்லுமிடங்களில் தினமணியுடன் சென்று வந்தேன். 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.
அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடை தினமணியில் தினமும் வருகிறது. அவைகளைச் சேகரித்துத் தேர்வு எழுதுபவர்களுக்குக் கொடுத்து உதவுகிறேன். சிலர் தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசுப் பணியாற்றியும் வருகிறார்கள். அதில் என் பேத்தியும் அடக்கம். இப்பணித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
-க.வை.ராமகிருஷ்ணன்,
நாமக்கல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...