முகக்கவசங்களின் முகவரி

கரோனா பாதிப்பிற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்தே செயல்படுகின்றனர்.
முகக்கவசங்களின் முகவரி
Updated on
2 min read


கரோனா பாதிப்பிற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்தே செயல்படுகின்றனர். எனவே, கரோனா வைரஸின் மூலம் பரவும் தொற்று நோயான கோவிட்19-ன் அடையாளமாக இந்த முகக்கவசங்கள்தான் இருக்கின்றன.

முகக் கவசங்கள்தான், விஞ்ஞான வளர்ச்சியடைந்த 21-ஆம் நூற்றாண்டில் கொடிய வைரஸ் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள ஓரளவாவது கைகொடுக்கும் நவீன மருத்துவக் கண்டுபிடிப்பு என்கிறார்கள் மருத்துவர்கள்.
கரோனா தொற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் முக்கியக் கருவிகளில் முதன்மையானது இந்த முகக்கவசங்கள்தான்!

16-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தே முகக்கவசம் அணியும் பழக்கத்தை மக்கள் மேற்கொண்டுள்ளனர். 17-ஆம் நூற்றாண்டில், பெரும் நோய்கள் அனைத்தும் மோசமான காற்றை சுவாசிப்பதால் தான் உருவாகிறது என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் தோன்றிய காரணத்தால் அவர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிவதை பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். 17-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிளேக் நோய் தான், முககவசங்களைப் பரவலாக அனைவரும் அணியும் பழக்கத்தை உருவாக்கியது.  

அப்போது வாழ்ந்த மக்கள்,  பிளேக் நோய் மற்றவர்களிடமிருந்து பரவும் என்று நம்பியெல்லாம் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளவில்லை. ஆனால், அந்த நோய் நிலத்திலிருந்து வெளியேறும் நச்சு கலந்த வாயுக்களால் பரவுவதாக நம்பினர். அந்த நச்சு கலந்த வாயுக்கள் காற்றில் பரவி நம்மைத் தாக்கிவிடும் என்று நினைத்திருந்தனர். அதன் காரணமாகத்தான் முகத்தைத் துணியால் மூடியபடி இருந்தனர்.

1897-ஆம் ஆண்டு அறுவைசிகிச்சை முகக்கவசங்களை மருத்துவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். அந்த முகக்கவசங்கள் கைக்குட்டைகளை போன்று இருந்தன. அறுவைசிகிச்சை முகக்கவசங்களானது காற்றிலிருக்கும் துகள்கள், கிருமிகள் ஆகியவை மூக்கில் ஏறிவிடக் கூடாது என்பதற்காகப் பயன்படுத்தப்படவில்லை. அறுவைசிகிச்சை நடைபெறும்போது மருத்துவர்களின் தும்மல் மற்றும் இருமல் மூலம் வெளியேறும் நீர்த்துளிகள், காயங்களில் பட்டுவிடாமல் இருப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. அன்றிலிருந்து இன்று வரை அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் பல வடிவ மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும், அதற்கான பயன்பாடு மட்டும் மாறவேயில்லை.

 முகக் கவசங்கள் உருவான கதை!

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது, தூசி அதிகமிருக்கும் காற்றைச் சுவாசிக்க நேரிட்டதால், காற்றை வடிகட்டி சுவாசிக்க முகக் கவசங்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கினர். பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் வடிவமைப்பு, தலை முழுவதும் மூடிக் கொள்ளும் படியாக இருந்தது. இதே போன்று ஃபைபர்கிளாஸ் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களைச் சுரங்கத் தொழிற்சாலைகளில் பயன்படுத்த தொடங்கினர். இதன் மூலம் சுரங்கத் தொழிலாளர்களுக்கு நுரையீரலில் ஏற்படும் மருத்துவப் பிரச்னைகள் பாதியாகக் குறைந்தன.

இந்த முகக்கவசமானது பல உயிர்களைக் காத்து வந்தாலும், மிகப் பெரிய சுமையாகக் கருதப்பட்டது. அதில் சுற்றப்பட்டிருக்கும் ஃபைபர்களை தாண்டி சுவாசிப்பதென்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. மேலும், தலை முழுவதும் இந்த முகக்கவசத்தால் மூடிக்கொண்டு வேலை செய்வதால் அது சூட்டை ஏற்படுத்தியது.

1950-ஆம் ஆண்டுகளில், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பரிசுப் பொருள்களைத் தயாரிக்கும் 3எம் என்ற நிறுவனம் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது. பரிசுப் பொருள்களின் மேல் ஒட்டப்படுவதற்காகப் பாலிமரை உருக்கி துணியோடு சேர்த்து ரிப்பன்கள் செய்யும் தொழில்நுட்பத்தைக் கொண்டு 100 பொருள்களுக்கு மேல் செய்யலாம் என்பதை அந்த ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தது அந்நிறுவனம்.

இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, 1961-இல் குமிழி வடிவிலான முகக் கவசத்தை அறிமுகப்படுத்தியது 3எம் நிறுவனம். இந்த வகை முகக்கவசங்கள் நோய்க்கிருமிகளைத் தடுக்காது என்பதை உணர்ந்த அந்த  நிறுவனம், தூசிகளைத் தடுக்கும் முகக்கவசங்கள் என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்தது.

1970-ஆம் ஆண்டு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களைத் தயாரித்தது 3எம் நிறுவனம். தூசியிலிருந்து காத்துக்கொள்ள உதவும் அந்த முகக் கவசத்திற்கு என் 95 முகக்கவசம் என்று பெயரிட்டது அந்நிறுவனம். மே 25, 1972-ஆம் ஆண்டு அந்த முகக்கவசங்களுக்கு ( Centres for Disease Control) CDCயிடம் அனுமதி பெற்று சந்தையில் அறிமுகப்படுத்தியது 3எம் நிறுவனம். இம்முறை அந்த முகக்கவசத்தில் ஃபைபரைப் பயன்படுத்தாமல் பரிசுப் பொருள்களுக்கு மேல் ஒட்டப்படும் ரிப்பன் மெட்டீரியலை பயன்படுத்தியிருந்தது . முகக்கவசங்கள் செய்ய உதவும் பொருள்களில் மின்னியல் ஆற்றலையும் புகுத்தியிருந்தது அந்நிறுவனம். இதன்மூலம் சுவாசிப்பது எளிதானதோடு சிறிய தூசி துகள்கள்கூட உள் நுழைய முடியாதபடி செய்தது. இந்த முகக்கவசத்தில் உள்ள அடுக்குகளிடையே அதிகப்படியான தூசி துகள்கள் மாட்டிக்கொண்டால் சுவாசிப்பது கடினமாகிவிடும். எனவே 8 மணிநேரத்திற்கு மேலாக இந்த முகக்கவசங்களைப் பயன்படுத்த முடியாது.

1972-இல் என் 95 முகக்கவசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இது தொழிற்சாலைகளில்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1990-ஆம் ஆண்டுகளில் காசநோய் ஏற்படுவது அதிகரித்தது. காசநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் காற்றின் மூலமாக காசநோய் பரவியது. இந்தத் தொற்றைத் தடுப்பதற்காக என்95 முகக் கவசங்களில் சில மருத்துவ மாற்றங்களைச் செய்தது . இதன் மூலம் தூசி துகள்கள் மட்டுமல்ல கிருமிகளையும் வடிகட்டும் வல்லமை பெற்றது என்95 முகக் கவசம். அதன் பின், மருத்துவர்கள் காசநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது இந்த என்95 முகக் கவசங்களை அணிந்து கொண்டனர். 

அதாவது 95 என்பது காற்றிலிருக்கும் 95 சதவிகித தூசிகளையும் கிருமிகளையும் இது வடிகட்டிவிடும் என்பதைக் குறிக்கிறது.இது எண்ணெய்யைத் தாக்குப் பிடிக்கும் வகையில் செய்யப்படவில்லை என்பதை "ச'என்ற எழுத்து குறிக்கிறது.

5 மாதங்களுக்கும் முன்பு வரை இந்த வகை முகக் கவசங்கள் சிறிய அளவில்தான் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், கரோனா தொற்றின் காரணமாக தற்போது இந்த வகை முகக்கவசங்களை அதிகம் காணமுடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com