பசுமை வளர்ப்பில் பட்டதாரிகள்

இன்றைய இளைய தலைமுறை, பொழுது போக்கு என்ற பெயரில் பிற விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், கடும் வெயிலை பொருட்படுத்தாமல் மரங்களை நடும் பணியில் வடசென்னையைச் சேர்ந்த
பசுமை வளர்ப்பில் பட்டதாரிகள்
Updated on
2 min read

இன்றைய இளைய தலைமுறை, பொழுது போக்கு என்ற பெயரில் பிற விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், கடும் வெயிலை பொருட்படுத்தாமல் மரங்களை நடும் பணியில் வடசென்னையைச் சேர்ந்த பட்டதாரிகள் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இயற்கையை நேசிக்கும் இவர்கள் 30 பேர் அடங்கிய குழுவாக செயல்பட்டு வருகிறார்கள். வட சென்னையைப் பசுமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுவரை 500 மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார்கள். ஆயிரம் மரங்கன்றுகளை இலவசமாக வழங்கியிருக்கிறார்கள்.

மரக்கன்று நடும் குழுவிலுள்ள கல்லூரி மாணவி ஜெனிஷாவிடம் பேசினோம்:

""வட சென்னையைப் பொருத்தவரை சமீப காலமாக இங்குள்ள மரங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக வெட்டப்படுகின்றன. இயற்கையை நேசிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறை செல்போன், சமூகவலைத்தளங்களில் காட்டும் அக்கறையை இயற்கை மீது காட்டுவதில்லை. நான் பள்ளியில் படிக்கும் போதே சாரணியர் இயக்கத்தில் சேர்ந்து முடிந்தளவு சமூக சேவை செய்து வருகிறேன். அந்த சமூக சேவையின் மற்றொரு வடிவம் தான் இந்த மரக்கன்றுகளை நடுவது. மரக்கன்றுகளை நடுவதோடு மட்டும் எங்கள் பணி முடிந்துவிடாது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி மறக்காமல் தண்ணீர் விடச் சொல்கிறோம். வாரம் ஒரு முறை சென்று பார்த்து பராமரித்து வருகிறோம். கம்பி வேலி அமைத்துக் கொடுக்கிறோம். வரும் காலங்களில் வட சென்னை மட்டுமல்ல அனைத்து பகுதிகளிலும் எங்களுடைய இந்த பசுமை வளர்ப்பு சேவை தொடரும்'' என்கிறார்.

பட்டதாரிகளின் இந்த சமூகப்பணியை தொடங்கி அவர்களுக்கு உதவி வரும் நம்பிக்கை சிகா சமூக நல அமைப்பின் தலைவர் தூயவனிடம் பேசினோம்:

""இளைய தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும். அவர்களிடம் விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டும். வேறு தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிவிடக் கூடாது. அவர்களிடம் இயற்கை நேசிக்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டுமென்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது தான் எங்களுடைய நம்பிக்கை சிகா சமூக நல அமைப்பு. இதற்காக பள்ளியில் படிக்கும் போதே மாணவர்களிடம் சமூகம் சார்ந்துபணிகளை ஆரம்பித்து விடுகிறோம். பட்டதாரிகளாக ஆகும் போது அவர்கள் தானாக முன் வந்து இதுபோன்ற மரக்கன்றுகளை நடுதல், மரங்களை வளர்த்தல், முதியோர்களுக்கு உதவுதல் போன்ற பணிகளை எங்கள் வட சென்னை பகுதிகளில் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். எங்களுடன் இந்த சமூகப்பணியில் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.

இந்த முறை கொங்கு, மகிழம், அசோகா, கொய்யா போன்ற காற்று அதிகம் தரும் மரங்களை நட்டு இருக்கிறார்கள். கனிகளை தரும் மரங்களையும் தொடர்ந்து நட்டு வருகிறார்கள். வளர்ந்த மரம் ஒன்றை வாங்குவதற்கு நூறு ரூபாய் வரை செலவாகிறது. மரக்கன்றுகள் 30 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இதற்காக நாங்கள் யாரிடமும் பணம் வாங்குவதில்லை. எங்கள் சமூக நல அமைப்பை சேர்ந்தவர்கள் தரும் நிதியை வைத்து தான் இந்த பசுமைப்பணி மட்டுமல்லாமல் பிற பணிகளையும் செய்து வருகிறோம்'' என்றார்.

இருப்பிடம் போதும் - இயற்கை வேண்டாம்: ""இயற்கை தான் முதல் கடவுள். அன்றாடம் நாம் சுவாசிக்க உதவும் காற்றைத் தரும் மரங்களுக்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் இப்போதுள்ள குடியிருப்பு வாசிகள் எங்களுக்கு இருப்பிடம் போதும் என்று மரங்களை வெட்டி விட்டு வீடாக கட்டி விடுகிறார்கள். வட சென்னையில் இப்படியாகப் பல பகுதிகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டுப் பிளாக்குகளாக மாறிவிட்டன.

இந்த நிலை மாற வேண்டுமானால் இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் வட சென்னைப் பகுதியில் இதுவரை 500 மரங்களை நட்டு நாங்களே பராமரித்து வருகிறோம். அரசாங்கம் எங்கள் சமூகப்பணிக்கு உதவ வேண்டும். நாங்கள் நட்டு வைத்த மரங்களைப் பராமரிக்க விட்டாலே போதுமானது. ஆனால் சாலை அமைக்கிறோம், ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் மரங்கள் வெட்டப்படுகின்றன. இது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாகும். ஆகையால் பசுமை வளர்ப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்'' என்கிறார் நம்பிக்கை சிகா சமூக அமைப்பின் இணைச் செயலாளரான ஆர்.ராஜலெட்சுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com