

திருவான்மியூரில் பரதக் கலைக்கொரு பல்கலைக்கழகமாகத் திகழ்கின்ற கலாக்ஷேத்ரா, பிரம்ம ஞானியாகிய டாக்டர் ஜார்ஜ் அருண்டேலின் மூளைக்குழந்தையாகும். இந்திய நாட்டின் பாரம்பரிய கலைகளுக்காகவும் டாக்டர் ருக்மணி தேவியின் கலைச்சேவைக்காகவும் 06.01.1936 அன்று 100 ஏக்கர் நிலப்பரப்பில் தோற்றுவிக்கப்பட்ட கலைக்கோயில்தான் "கலாக்ஷேத்ரா'.
மதுரையில் வடமொழிவாணராகவும் பொறியாளராகவும் திகழ்ந்த நீலகண்ட சாஸ்த்திரி அன்னி பெசன்ட்டின் பிரம்மஞானத்தால் ஈர்க்கப்பட்டு பிரம்மஞான சபையின் அருகிலேயே அடையாற்றில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு குடியேறிவிட்டார். நீலகண்ட சாஸ்த்திரிக்கும் - சேஷம்மாளுக்கும் மகளாக 29.02.1904 அன்று ருக்மணி தேவி பிறந்தார். ருக்மணி என்ற சொல்லிற்கு "ஒளிரும் மணி'என்று பொருள். எதிர்காலத்தில் நடனத்தில் ஒளிரும் மணியாகப் பிரகாசிக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் பிரார்த்தனையாக இருந்திருக்கலாம்.
அன்னி பெசன்டைக் குருவாக ஏற்றுக்கொண்ட டாக்டர் அருண்டேல் பிரம்ம ஞானத்திற்கென்றே தம்முடைய வாழ்வை அர்ப்பணித்தவர். அந்த அர்ப்பணிப்பால் நீலகண்ட சாஸ்திரியின் குடும்பத்திலும் ஓர் உறுப்பினர் போல் ஆனார். சேஷம்மாள் அருண்டேலைக் "கிருஷ்ணன்'என்றுதான் அழைப்பார். ருக்மணிதேவிக்குப் பிரம்மஞானத்தில் ஈடுபாட்டைக்கண்ட அருண்டேல் அவரைத் தம் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொள்ள விழைந்தார். 1920-ஆம் ஆண்டு அருண்டேல் - ருக்மணி திருமணம் பிரம்மஞான சபையிலேயே அல்லாடி மகாதேவ சாஸ்த்திரியால் நடத்தி வைக்கப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு இருவரும் பிரம்மஞானத்தைப் பரப்புவதற்காக உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டனர். 1923-ஆம் ஆண்டு அகில உலக இளம் பிரம்மஞானிகள் சபையின் துணைத் தலைவரானார் ருக்மணி தேவி. அதே ருக்மணி தேவி 1925-ஆம் ஆண்டு பன்னாட்டுப் பிரம்மஞானிகள் சபைக்குத் தலைவரானார்.
ஒரு முறை மும்பையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குக் கப்பலில் பயணிக்கும் போது உலகப் புகழ் பெற்ற பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோனாவின் நட்பு கிடைத்தது. பயணத்தின்போது அவரிடம் பாலே நடனத்தின் நுட்பங்களை எல்லாம் கற்றறிந்தார். மேலும், பாலே நடனத்தைத் தாமே ஆடிப் பயிற்சி பெற வேண்டும் என விரும்பியதால் மாஸ்ட்ரோ கிளியோ நார்டியிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கிளியோ நார்டி மூலம் பாலே நடனத்தின் ஆழ அகலங்களைக் கற்றார், ருக்மணி. என்றாலும், அந்த இரண்டு பாலே நடனக் கலைஞர்களும் இந்திய நாட்டின் பாரம்பரிய நடனத்தில் கவனம் செலுத்தும்படி ருக்மணி தேவிக்கு அறிவுறுத்தினர்.
இந்தியா திரும்பிய அருண்டேல் தம்பதியர், 1933-ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாதெமியில், ஒரு சதிராட்டத்தைக் காண நேர்ந்தது. சதிராடிய பெண்கள் விகாரமான ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்களுடைய அங்க அசைவுகள் சிருங்காரத்தை அள்ளி வீசின. நட்டுவாங்கம் கொச்சையாக இருந்தது. நாட்டியத்திற்கு நேர்ந்த அவல நிலையைத் துடைத்தெறிய வேண்டுமென்று இருவரும் முடிவெடுத்தனர்.
சதிராட்டம் அறவே ஒழிக்கப்பட வேண்டும் எனக் கங்கணம் கட்டிய ருக்மணி தேவி, நாட்டியக் கலையை மயிலாப்பூர் கெளரி அம்மாளிடமும் பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடமும் முறையாக கற்றார். மேட்டுக்குடி மக்கள் நாட்டியம் ஆடுவது அக்காலத்தில் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒன்று. "நான்கு வேதங்களைக் கற்றடையும் பேற்றினைச் சரியான நாட்டியத்தின் மூலமும் உணர்வு வெளிப்பாட்டின் மூலமும் பெற முடியும்' எனும் "அபிநய தர்ப்பணம்' என்ற நூலில் குறிப்பிடப்பெற்ற செய்தியை ருக்மணி தேவி பழைமைவாதிகளுக்குப் பதிலாகத் தந்தார். அது போலவே அருண்டேலும் "பரதம் ஒரு கோயில்; ஒரு கோயிலிலுள்ள அத்தனை அம்சங்களும் நாட்டியத்தில் உண்டு' எனப் பதிலுரைத்தார். தடைகளை மீறி, 30 வயதிற்குள் நாட்டியத்தை ஆதியோடு அந்தமாகக் கற்றார் ருக்மணி தேவி.
பிரம்மஞான சபையின் வைர விழா 1935-ஆம் ஆண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டபோது, அதில் ருக்மணி தேவியின் அரங்கேற்றத்தையும் ஒரு நிகழ்ச்சியாக இணைத்தனர். அந்த அரங்கேற்றத்தின்போதுதான் "பரதம்' என்ற சொல் முதல் முறையாக ருக்மணி தேவியால் உச்சரிக்கப்பட்டது. அதனை ருக்மணி தேவிக்கு நினைவூட்டியவர் ஈ. கிருஷ்ணய்யர் ஆவார். பரத நாட்டிய அரங்கில் நடராஜப் பெருமான் விக்கிரகத்தையும் முன்னிலைப்படுத்தியவர் ருக்மணி தேவியே!
பரதக்கலையில் ருக்மணி தேவியின் முதல் தோற்றம் என்பதால் நகரத்தின் மிக முக்கிய மனிதர்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர். ஒவ்வொரு நடனத்திற்கும் முன்னர் டாக்டர் அருண்டேல் வழங்கிய இணைப்புரை அனைவரின் நெஞ்சங்களையும் கவர்ந்தது. அது குறித்து "கல்கி', "ஆனந்தவிகடன்' பத்திரிகையில் "ருக்மணி தேவியின் நாட்டியத்திற்கு இணையாக அருண்டேல் ஆரம்பம் மற்றும் இடையிடையே ஆற்றிய உரையும் இடைவேளையின்போது பேசியதும் பரதநாட்டியத்திற்கு இணையாகப் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது' என விமர்சனமாக எழுதினார்.
அந்த அரங்கேற்றத்திற்கு வந்திருந்த செம்மங்குடி சீனிவாச ஐயர் "பரதத்தைத் தெய்வநிலைக்கு உயர்த்தியவர் ருக்மணி தேவி' எனப் பாராட்டிச் சென்றார். மேலும், அந்நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த மயிலாப்பூர் தேவாலயத்தின் பாதிரியார் ஒருவர் "நாட்டியத்தை நேரில் கண்டு ஞானஸ்நான நிகழ்ச்சியில் பங்கு கொண்டது போன்ற உணர்வைப் பெற்றேன்' என தம் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
ருக்மணி தேவி நாட்டியத்திற்குச் செய்த பெருந்தொண்டு அந்நிகழ்ச்சியைப் பார்ப்போருக்கு இடையிடையே ஏற்படும் அயர்ச்சியைப் போக்கியதுதான்! பாலே நடனத்தில் கைகால்களின் அசைவுகள் முதலிலிருந்து முடிவு வரை முழுமை பெற்றதாக இருக்கும். தேவையின்றி உடல் உறுப்புகள் இயங்கா! பாலே கற்ற ருக்மணி தேவி அதனை அப்படியே பரதத்திற்குக் கொண்டு வந்தார். தமக்கு முன்பு வரையறையில்லாமல் நிகழ்ந்து கொண்டிருந்த ஆடற்கலையில் நட்டுவாங்கம் இசைக்கும் நடனப் பெண்மணி கூடவே ஓடி வருவார்.
ருக்மணி தேவி நட்டுவாங்கத்தை அப்படியே மேடைக்கு ஓரத்தில் உட்கார வைத்தார். முன்னர் இடம் பெறாத வயலின் வாத்தியத்தைப் பரதத்தில் இடம் பெறச் செய்தார். பண்டைய சிற்பங்களில் காணப்பட்ட ராஜபுத்திர ஆடைகளையே பரதப்பெண்மணிகள் அணியுமாறு செய்தார் டாக்டர் அருண்டேல். இவ்வாறாக "கலாக்ஷேத்ரா பாணி' என்ற புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தார்கள் தம்பதியர்.
கலாக்ஷேத்ராவை ஒரு சர்வ கலாசாலையாக ஆக்கியவர் ருக்மணிதேவி! பண்டைக் கால குருகுலங்களைப் போல் ஆசாரங்களும் ஒழுக்கங்களும் முதன்மைப்படுத்தப்பட்டன. கல்லூரிகளைப் போலவே பாடவேளைகள் பிரிக்கப்பட்டு அந்தந்தத் துறையில் வல்லுநர்கள் பயிற்றுநர்கள் ஆனார்கள். பல மாநிலங்களிலிருந்தும் கடல் கடந்த நாடுகளில் இருந்தும் மாணவியர் கலாக்ஷேத்ராவைத் தேடி வந்தனர்.
பரதக்கலையின் புனிதத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு கோட்பாட்டில் ருக்மணி தேவி கடைசி வரையில் உறுதியாக இருந்தார். "மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்' என வாழ்ந்த ஆண்டாள் நாச்சியாரைப்போல எந்த மானிடருடைய சரிதத்தையும் எந்த அரசர்களுடைய வரலாற்றையும் தம் கலையில் காட்சிப்படுத்துவதில்லை என்பதே அக்கோட்பாடு.
"சபரி மோட்சம்', "குமார சம்பவம்', "பாதுகா பட்டாபிஷேகம்', "குறவஞ்சி', "துருவ சரித்திரம்', "கீத கோவிந்தம்' போன்ற 26 தெய்வ சம்பந்தமுடைய நிகழ்ச்சிகளே அரங்கேறின.
நடனக்கலையை ஆதியோடு அந்தமாகத் தெரிந்த பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் தண்டாயுதபாணி பிள்ளையும் அடவுகளையும் அபிநயத்தையும் மாணவிகளுக்குப் பயிற்றுவித்தார்கள். டைகர் வரதாச்சாரி இசைக்கலையின் நுட்பங்களை மெய்ப்பாட்டோடு கற்பித்தார்.
நடனத்திற்குப் பொருத்தமான கீர்த்தனைகளையும் பாடல்களையும் பாபநாசம் சிவன், ருக்மணி தேவிக்கும் மாணவிகளுக்கும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். மேலும், நாட்டிய நிகழ்ச்சியின் முடிவில் பாபநாசம் சிவன், தமிழ் விருத்தம் பாடி நிறைவு செய்தார். கதகளிக் கலையைக் கற்பிக்க அம்புப்பணிக்கர் நியமிக்கப்பட்டார். "குசேல விருத்தம்' நாட்டிய நாடகத்தில் ருக்மணி தேவியே கதகளி உடையில் தோன்றி கிருஷ்ணன் பாத்திரத்தில் அனைவரும் பிரமிக்கும்படியாகச் செய்தார். "குறவஞ்சி' நாட்டியத்தை மேடையேற்ற இருந்தபோது ரசிகமணி டி.கே. சிதம்பர நாத முதலியார் குறவஞ்சிப் பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். ரசிகமணியே ருக்மணி தேவிக்கு அப்பாடல்களை எடுத்தல் படுத்தலோடு படித்தும் காட்டினார்.
கலைத்துறைக்கும், கல்வித்துறைக்கும் ருக்மணி தேவி ஆற்றிவரும் சேவைகளை மதிப்பிட்டு மத்திய அரசு, 1952-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக்கியது. 1956-ஆம் ஆண்டு மறுபடியும் அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கியது. மாநிலங்களவையில் இடம்பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ருக்மணி தேவி ஆவார். அவருடைய பணிகளுக்காக பத்மபூஷண் விருது 1956-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 1965-ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதெமி விருதும் கிட்டியது. அனைத்திற்கும் சிகரமாக அமெரிக்காவிலுள்ள இந்தியானா பல்கலைக்கழகம் ருக்மணி தேவிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
ருக்மணி தேவியின் வாழ்க்கை முழுமையும் மனிதநேயம் மிகுந்திருந்தமைக்கு ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். அன்னிபெசன்டிற்கு இளம் பிள்ளைகளோடு தொடர்பு இருக்க வேண்டுமென்று டாக்டர் அருண்டேல், அன்னிபெசன்ட் பெயரில் ஓர் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கினார். பொருளாதார நெருக்கடியால் அது மூடப்பட்டது. அப்பொழுது, ருக்மணி தேவி இரண்டு நாட்டிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தி அதன் மூலம் வந்த நிதியால் மீண்டும் அப்பள்ளிக்கூடம் புத்துயிர் பெற்றது.
இன்றைக்கு "பிராணிகள் வதைச் சட்டம்' நடைமுறையில் இருக்கிறதென்றால் அதற்கு மூல முதற்காரணம் ருக்மணி தேவியார். அதனை 1952- இல் மாநிலங்களவையில் முன்மொழிந்து பேசும் போது பெரும்பான்மையினோர் எதிர்த்தனர். "பிராணிகளுக்குப் பேசத் தெரியாது; உங்களுக்குப் பேசத் தெரியும். அவற்றின் குரலைக் கேட்டு நீங்கள் பேசினால்தான் உங்கள் வாழ்க்கையில் அமைதியும் சமாதானமும் கிட்டும்' என ருக்மிணி தேவி வாதிட்டதைக் கேட்டு அனைவரும் இசைந்து சட்ட வடிவம் தந்தனர்.
பிராணிகளைப் பேணிப் பாதுகாக்கும் வாரியத்தின் தலைவராக அமர்ந்த முதல் பெண்ணும் அவரே! மனிதர்கள் அனைவரும் மிருகங்களைக் கொல்லாமல் தாவர உணவை உண்ண வேண்டும் என்று நாடு முழுவதும் பரப்புரை செய்தவர் ருக்மணி தேவி. மேலும் "பன்னாட்டுத் தாவர உணவுப் பேரவையின் துணைத் தலைவராக மூன்று தலைமுறைக்குப் பதவி வகித்த பெருமையும் அவரையே சாரும்.
வாயில்லா ஜீவன்களுக்காக ருக்மணி தேவி தொடர்ந்து ஆற்றிய பணிகளுக்காக, குடியரசுத் தலைவர் ஜாஹிர் உசேன் 1968-ஆம் ஆண்டு "பிராணி மித்ரா' விருது வழங்கிக் கெளரவித்தார். 1987-ஆம் ஆண்டு மத்திய அரசு ருக்மணி தேவிக்கு தபால்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.
குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1977-இல் காலமானவுடன் அப்பொழுது பிரதமராகவிருந்த மொரார்ஜி தேசாய் ருக்மணி தேவியை அப்பதவியை ஏற்குமாறு வேண்டினார். ஒரு முறையன்று, மூன்று முறை பிரதமர் வேண்டினார். மூன்றாவது முறையும் மறுத்துவிட்டார்.
"நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பிரதமர் மொரார்ஜி தேசாயின் விருப்பம் அனைவராலும் பாராட்டப்பெற்றது. அதனை ஏற்க மறுத்து ருக்மணி தேவியார் சொன்ன காரணங்களைக் கேட்டு அனைவரும் சிலிர்த்துப் போனோம். அவருடைய ஞானம் மதிநுட்பம் இந்திய நாட்டினுடைய பாரம்பரியம் அனைத்தும் கண்டு அதிசயித்தோம்' என ருக்மணி தேவியின் நினைவுச் சொற்பொழிவை 2013-ஆம் ஆண்டு நிகழ்த்தும்போது குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார்.
ருக்மணி தேவி கலைத்துறைக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி லலித் கலா அகாதெமி அவருடைய நூற்றாண்டு விழாவை 29.02.2004 அன்று கொண்டாடியது. அப்பொழுது, டாக்டர் சுனில் கோத்தாரியால் தயாரிக்கப்பட்ட நிழற்படச் சரிதத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் வெளியிட்டு ருக்மணி தேவியின் கலைத்தொண்டினைப் பாராட்டிப் பேசினார்.
24.02.1986 அன்று இயற்கையடைந்த ருக்மணி தேவி இந்தியப் பாரம்பரியத்திலும் தனி மனித வாழ்க்கையிலும் ஒரு புரட்சிப்பெண்ணாகவே வாழ்ந்து மறைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.