உயிர் காக்கும் தோழர்

மருத்துவத்துறையை சார்ந்தவர்கள் மட்டும்தான் உயிர் காக்கும் சேவையை செய்ய முடியுமா?சாதாரண மனிதர்களுக்கும் மனம் இருந்தால் செய்யலாம் என்பதற்கு உதாரணம் தான் எஸ்.எம்.வெங்கடேஷ்.
உயிர் காக்கும் தோழர்
Updated on
2 min read

மருத்துவத்துறையை சார்ந்தவர்கள் மட்டும்தான் உயிர் காக்கும் சேவையை செய்ய முடியுமா?சாதாரண மனிதர்களுக்கும் மனம் இருந்தால் செய்யலாம் என்பதற்கு உதாரணம் தான் எஸ்.எம்.வெங்கடேஷ்.

சென்னை தலைமை செயலகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி(ம) செய்தி துறையில் பதிவுரு உதவியாளராக பணியாற்றுகிறார்.நாம் அவரைச் சந்திக்க சென்ற போது வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் காயப்படுத்தப்பட்ட ஆதரவற்ற பெண் ஒருவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

என்னை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்பாபு, செல்லிடப்பேசியில் அழைத்து "மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண் ஒருவரை மீட்டுள்ளோம். அவருக்கு வாயிலிருந்து ரத்தம் வருகிறது. உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது.

அவரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல உதவ வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். இரவு நேரம் என்பதால் எங்கும் அழைத்துச் செல்ல முடியாது உங்கள் பொறுப்பில் காலை வரை வைத்திருங்கள் என்று சொல்லிவிட்டு, காலையில் காவல் நிலையம் சென்று அவர்களின் அனுமதி பெற்று அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற ஏற்பாடு செய்தேன் என்று தனது சேவையைப் பற்றி விளக்கமளிக்கும் சமூக சேவகர் எஸ்.எம். வெங்கடேஷிடம் தொடர்ந்து பேசினோம்:

""நான் 1995-ஆம் ஆண்டிலிருந்து இந்த உயிர் காக்கும் சேவையை செய்து வருகிறேன்.இதுவரை சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்து ஐநூறு நபர்களை காப்பாற்றியிருக்கிறேன்.முழுக்க சேவை செய்வது தான் என்னுடைய வாழ்க்கை. இந்நிலையில் 2007-ஆம் ஆண்டு எனக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி(ம) செய்தி துறையில் பதிவுரு உதவியாளராக வேலை கிடைத்தது.

சென்னையிலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் என்னுடைய தொடர்பு எண் வைத்திருப்பவர்கள். அவசர உதவி என்றால் உடனே என்னை அழைப்பார்கள். ஆண்கள் என்றால் நான் அவர்களை தூக்கி வண்டியில் ஏற்றி விடுவேன்.பெண்கள் என்றால் உடன் உதவிக்கு சேவை மனப்பான்மை கொண்டவர்களை அழைத்துக் கொள்வேன். அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றும் கலையரசி, ஜெனிதா உடன் வந்து உதவி செய்வார்கள். அலுவலக நேரத்தில் என்னை அவசரமாக அழைத்தால் என்னுடைய மேல் அதிகாரிகளிடம் சென்று விவரத்தை தெரிவிப்பேன். "எங்களால் தான் இது போன்ற சேவை செய்ய முடியவில்லை. நீங்களாவது போய் செய்யுங்கள்' என்று அனுமதி தருவார்கள். அவர்களுடைய ஒத்துழைப்பால் தான் இன்று பலர் நல்வாழ்வு அடைந்திருக்கிறார்கள்.

என்னுடைய சேவைகளைப் பார்த்து வளர்ந்த என்னுடைய மகள் அகல்யாவும் இப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.அதையே தன்னுடைய பணியாக மாற்றிக் கொண்டுள்ளார்.

என்னுடைய சேவையை பாராட்டி தமிழக அரசின் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்ப்பில் மாநில சிறந்த சமூக பணியாளர் என்ற தங்கப்பதக்கம் விருதை 2012-ஆம் ஆண்டு வழங்கியது.அதனைத் தொடர்ந்து மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பாக டாக்டர் அப்துல் கலாம் சேவாரத்னா விருதை 2015-ஆம் ஆண்டு சர்வதேச புத்தமதம் தலைவர் தலாய்லாமா எனக்கு வழங்கினார்.

கரோனா காலத்திலும் என்னால் முடிந்தளவு சேவைகளை செய்தேன்.அதன் காரணமாக சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சுப்பையா, முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து என்னுடைய சேவைக்கு உதவிடும் வகையில் மாருதி ஈக்கோ வேன் ஒன்றை மீட்புப்பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு பரிசாக வழங்கினார்கள்'' என்றார் வெங்கடேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com