வாயில்லா ஜீவன்களே உயிர் நாடி!

சென்னை சிறுசேரியில் அமைந்துள்ள தொழில்நுட்பப் பூங்காவில் பொறியாளராகப் பணியாற்றுபவர் சதீஷ். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியபடியே,  தனது சொந்த ஊரில் நாட்டு நாய் பண்ணை ஒன்றையும்
வாயில்லா ஜீவன்களே உயிர் நாடி!
Updated on
2 min read


சென்னை சிறுசேரியில் அமைந்துள்ள தொழில்நுட்பப் பூங்காவில் பொறியாளராகப் பணியாற்றுபவர் சதீஷ். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியபடியே, தனது சொந்த ஊரில் நாட்டு நாய் பண்ணை ஒன்றையும் பராமரித்து வருகிறார். எப்படி இது சாத்தியமானது?

அவரிடம் கேட்ட போது சொன்னார்:

என்னுடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள போத்தம்பட்டி. சிறுவயதிலேயே நாய்க்குட்டி மீது ஈர்ப்பு அதிகம். பள்ளிக்கு சென்று திரும்பும் வழியில் நாய்க்குட்டிகளைப் பார்த்தால் வீட்டுக்கு தூக்கி வந்துவிடுவேன். நான் பள்ளிக்குச் சென்ற பிறகு அப்பா அந்த நாய்க்குட்டியை எங்காவது கொண்டு விட்டுவிட்டு வருவார். இது அன்றாடம் நடப்பது வாடிக்கை. அப்பா அருள் காவல்துறையில் பணியாற்றினார்.

அவர் வேலை விஷயமாக ராஜபாளையம் சென்ற போது 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து நாய்க்குட்டி ஒன்றை வாங்கி வந்தார். 7 ஆண்டுகளாக வளர்த்தோம். நாங்கள் செல்லும் இடமெல்லாம் அந்த நாய் கூடவே வரும். அதுவே தனியாக சென்றாலும் திரும்பி வந்துவிடும். திடீரென வெளியே சென்ற அந்த நாய் திரும்பி வீட்டுக்கு வரவேயில்லை. அதற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தேடிப்பார்த்தோம். கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பிறகு நான் படித்து முடித்து சென்னை, பெங்களூர் என வேலை விஷயமாகச் சுற்றிக்கொண்டே இருந்தேன். ஊரில் வீடு கட்டினோம். தந்தை இறந்த நிலையில் தோட்டத்தைப் பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தோட்டத்திற்குப் பாதுகாப்புக்காக மீண்டும் ராஜபாளையம் நாய் வாங்கியாக வேண்டிய சூழல் வந்தது.. அதற்காக ராஜபாளையம் இரண்டு, மூன்று முறை சென்று பார்த்தும், நாங்கள் வளர்த்தது போல் தரமான நாய் கிடைக்கவில்லை. இறுதியாகப் பண்ணை ஒன்றில் ராஜபாளையம் நாய் கிடைத்தது. ஜோடி ஒன்று 18 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன்.

அதனை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று கற்றுத்தந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு அந்த நாய் பண்ணை உரிமையாளர் "கோவையில் நாய் கண்காட்சி நடக்கிறது அதில் கலந்து கொள்ள உங்கள் நாய்களைக் கொண்டு வர முடியுமா?' என்று கேட்டார். சரி என்று அந்தக் கண்காட்சிக்கு என்னுடைய ராஜபாளையம் நாய்களைக் கொண்டு சென்றேன். பெரும்பாலும் வெளிநாட்டு நாய்கள் மட்டுமே அந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டன. நம்முடைய நாட்டு நாய்களைப் பார்ப்பது அரிதாக இருந்தது. கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் என்னுடைய நாய் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு குட்டி போட்டால் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று என்னுடைய தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக் கொண்டார்கள்.

நாட்டு நாய் இனம் அழிந்து விடக்கூடாது அதனைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்ற சூழ்நிலையில் ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை, கன்னி, ராமநாதபுரம் இன நாய்களை வளர்க்க முடிவு செய்தேன்.

அதற்காக போத்தம்பட்டியில் பண்ணை ஒன்றை அமைத்தேன். நாய்க்குட்டிகள் பிறந்தவுடன் கென்னல் கிளப்பிற்குத் தகவல் கொடுத்தால் தந்தை, தாய் விவரம் தரம் ஆகியவற்றைச் சோதித்து சான்று கொடுப்பார்கள். அந்த விவரங்களை சிப்பாக நாய்க்குட்டியின் உடலில் செலுத்திவிடுவர். நாம் கண்காட்சிக்கு செல்லும் போது ஸ்கேன் செய்து குட்டியின் விவரத்தை தெரிந்து கொள்வர்.

சராசரியாக நாய் ஒன்றுக்கு 100 ரூபாய் செலவாகிறது. குட்டிக்கு 35 நாளில் தடுப்பூசி போட வேண்டும். அடுத்து குடல்புழு நீக்கத்திற்காக மருந்துகள் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். மருந்து கொடுக்க பதிவேடு வைத்து பராமரிக்க வேண்டும். இதற்காக மருத்துவர்கள் எனது பண்ணைக்கு வாரந்தோறும் இரண்டு முறை வருகிறார்கள். இப்போது என்னுடைய பண்ணையில் 60 நாய்கள் உள்ளன. அவை குட்டிகள் போட்டவுடன் தேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த கண்காட்சியில் வெளிநாட்டு நாய்களுக்கு சமமாக நம்முடைய நாட்டு நாய்கள் கலந்து கொண்டன. நம்முடைய நாட்டு நாய்கள் வெளிநாட்டில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்பது இது வரை அனுமதி பெறவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாட்டு நாய்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் சான்றுகள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையை மாற்ற என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன் வாரத்தில் ஐந்து நாள்கள் சென்னையில் வேலை செய்துவிட்டு சனி, ஞாயிறு ஆனதும், சொந்த ஊர் சென்று திரும்புவது வழக்கமாகவிட்டது. பயணம் கஷ்டமாகத் தான் இருக்கும். இந்த வாயில்லா ஜீவன்களைப் பார்த்ததும் அந்தக் கஷ்டங்கள் காற்றில் பறந்துவிடும். இவை தான் என் உயிர் நாடி'' என்றார் சதீஷ்.

சீதனமாகக் கொடுக்கப்படும் கன்னி

நாட்டு நாய்கள் பெரும்பாலும் ஊர் பெயர்களைத் தழுவியே வரும். ராஜபாளையம் நாய்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வீட்டு காவலுக்குப் பயன்படும்.

கன்னி ஆடு, கன்னி மாடு என்பது போன்று கன்னி நாய் வகை உள்ளது.

இவை ஆடு, மாடு மந்தை மற்றும் தோட்டக்காவலுக்குப் பயன்படும். பெரும்பாலும் பெண்களுக்குப் பிறந்த வீட்டுச் சீதனமாக ஆடு, மாடு வழங்கும் போது இந்தக் கன்னி வகை நாய்ஒன்றையும் சீதனமாக வழங்குவார்கள்.

கோம்பை வகை நாய்கள் சற்று முரட்டுதனமானவை. ஆள் இல்லாத வீட்டை பராமரிக்க உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com