நீரின்றி அமையாது உலகு

'நீரின்றி அமையாது உலகு' என்று முன்னோர்கள்  சொன்னதுதான் கணினிப்  பொறியாளராக இருந்த நிமல் ராகவனை சுற்றுப்புறச்சூழல் ஆர்வலராக  மாற்றியது.
நீரின்றி அமையாது உலகு
Updated on
1 min read


'நீரின்றி அமையாது உலகு' என்று முன்னோர்கள் சொன்னதுதான் கணினிப் பொறியாளராக இருந்த நிமல் ராகவனை சுற்றுப்புறச்சூழல் ஆர்வலராக மாற்றியது. அவர் நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளைச் செய்துவருகிறார். முப்பத்து ஐந்து வயது இளைஞரான அவர் கூறியதாவது:

''நான் காவிரி டெல்டா பகுதியான நாடியம் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். துபையில் பணிபுரிந்தபோது, எனது வாழ்க்கைத் தடத்தை மாற்றியது, 2018இல் தமிழ்நாட்டைப் புரட்டிப் போட்ட கஜா புயல்தான். மூன்று மாதம் புயல் நிவாரணப் பணியில் ஈடுபட்டேன்.
கஜா புயலுக்குப் பிறகு தண்ணீர் தட்டுப்பாடு. அப்போதுதான் குளம் குட்டைகள், கண்மாய்களைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம். இதற்காக, கிராம மக்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினோம். நாளடைவில் இதையே முழுநேர வேலையாக மாற்றிக் கொண்டேன். மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுக் கூட்டங்களையும் நடத்துகிறேன்.
பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டினேன். இதுவரை 142 நீர்நிலைகளை புனர்நிர்மாணம் செய்துள்ளோம். 16 லட்சம் மரக் கன்றுகளை நட்டுள்ளோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளுக்காடு கிராமத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியையும், ராமநாதபுரத்தில் வறண்டிருந்த கேணிக்கரை ஏரியையும் சீர்செய்துள்ளோம்.
ராணுவத்துக்காக, உத்தரப் பிரதேசத்தில் ப்ரக்யாராஜ் எனும் இடத்தில் ஏரியை சீரமைத்தோம். ஜம்முவில் கிஷ்த்வார் பகுதியிலும், ஹரியானாவில் லுஹரியிலும், விசாகபட்டணத்தில் நர்சிம்பட்டணத்திலும் ஏரிகளை சீரமைத்துக் கொண்டிருக்கிறோம்.
எனது பணிகளை அறிந்து கென்யா நாட்டிலிருந்து அழைப்பு வந்தது. மாதத்தில் பத்து நாள்கள் கென்யாவில் இருக்க வேண்டிவரும். கென்யா நீர்நிலைகளை சீரமைக்கப் பல மாதங்கள் பிடிக்கும். இந்தப் பணி வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் சோமாலியா வரை விரிவடையும்.
'மில்க்கி மிஸ்ட்' நிறுவனம் எங்களுக்கு ஜெ.சி.எம். இயந்திரத்தை அன்பளிப்பு செய்துள்ளது.
'எக்ஸனோரா', 'பயோட்டா சாயில்', 'ஊர் கூடி ஊரணி காப்போம்', 'நாம் தாமிரவருணி' போன்ற சமூக நல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
தமிழ்நாட்டில் 38321 குட்டைகள், 43,837 குளங்கள், 13,629 ஏரிகளை ஒட்டுமொத்தமாகச் சீரமைத்துவிட்டால், நாட்டிலேயே தமிழ்நாடு தன்னிறவை பெற்று விடும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com