புதுக்கோட்டையிலிருந்து சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டுள்ள பன்னிரண்டு வயதான பி.டி. இமான், சர்வதேசப் போட்டிகளில் ரோமில் இரண்டாம் பரிசையும், குரோஷியாவில் முதல் பரிசையும் பெற்றுள்ளார். அடுத்து இவர் ஜெர்மனியில் இருக்கிறார்.
ஓரியண்டல் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு பயிலும் இமான், பல்வேறு நாடுகளில் நடைபெறும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இத்தாலியின் ரோம் நகரில் டிசம்பர் 1 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்ற 'ரோமா சிட்டா அபெர்டா 6' என்ற சர்வதேசப் போட்டியில் பங்கேற்றார், இமான். ஒன்பது நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், இரண்டாமிடத்தைப் பிடித்த இமானுக்கு 400 யுரோக்கள் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து, குரோஷியா நாட்டில் டிச. 12 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற 'அட்வென்ட்ஸ்கி சாஹோவ்ஸ்கி' போட்டியில் பங்கேற்றார். இதில் சுமார் 100 போட்டியாளர்கள் உலகம் முழுவதும் இருந்தும் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் 'பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்து, 400 யுரோக்கள் ரொக்கப் பரிசாகப் பெற்றுள்ளார். அங்கிருந்தபடியே தற்போது ஜெர்மனுக்குச் சென்றுள்ளார். டிச. 26 முதல் ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் 'இன்டர்நேஷனல் ஏர்போர்ட் ஓப்பன்' போட்டியில் பங்கேற்கிறார். இதிலும் பரிசை வெல்வது நிச்சயம் என உறுதியாகக் கூறுகிறார் , இமான்.
மேலும் அவர் கூறியது:
'எனது அம்மா தீபா நெல்சனிடமிருந்துதான் எனக்கு சதுரங்க ஆர்வம் முதலில் கிடைத்தது. அப்பா பீர்முகமது முழுமையான ஆதரவைக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தி வருகிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று, ஏராளமான பரிசுகளை வென்றுள்ள நான், முதல் முறையாக சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன்.
நாடு முழுவதுமிருந்தும் மொத்தம் 7 பேர் இந்த சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறோம். இந்தியாவின் பெயரை நிலைநாட்டி, ஊர் திரும்புவோம்'' என்கிறார் இமான்.
- சா. ஜெயப்பிரகாஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.