'வாங்கும் ஊதியத்தில் சிறிதளவாது ஏழை, எளிய மாணவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும். அதுதான் எனது முக்கியமான குறிக்கோள் என்கிறார் திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளலிங்கம் பெரியநாயகி அம்பாள் நற்பணி இயக்கத் தலைவரும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவருமான ஆ.முருகேசன்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் கூறியது:
'என்னுடைய அப்பா ரெ.ஆறுமுகம் தேசிய நல்லாசிரியர், அம்மா மாரிக்கண்ணு இடைநிலை ஆசிரியர். நான் தலைமையாசிரியர். எனது குடும்பம் கல்வித்துறை சார்ந்தே பயணிக்கிறது.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, ஸ்ரீஅரங்குளலிங்கம் பெரியநாயகி அம்பாள் நற்பணி இயக்கத்தில் நானும், எனது நண்பர் வெள்ளைச்சாமியும் இணைந்தோம். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக அவர் இறந்து விட்டார். அன்றுமுதல் அவரது மகன் வெ.ராஜ்குமார் நற்பணி இயக்கத்தில் தன்னை இணைந்துகொண்டார்.
ஆண்டுதோறும் திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களை ஊக்குவித்தும், அவர்களை கெளரவித்தும் வருகிறோம். நல்ல மதிப்பெண் பெற்றும், கல்லூரிகளில் உயர் கல்வி படிப்பதற்கு சிரமப்பட்ட 10-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களை அவர்கள் விருப்பப்பட்ட கல்லூரிகளிலேயே சேர்த்துள்ளோம்.
11-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்பட்டதும். தற்போது 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களை கெளரவிக்கிறோம். அந்த வகையில் இவ்வாண்டு நடந்த அரசுப் பொதுத் தேர்வில் திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சஞ்சீவன், தர்ஷனா, பா.ஷஹிரா (10-ஆம் வகுப்பு) செ.சான்றோன், ந.யோகேஸ்வரி,க.புரூஸ் (11-ஆம் வகுப்பு) க.செல்வராஜ், சு.கவியரசன், ர.நாகலெட்சுமி (12-ஆம் வகுப்பு) போன்ற முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நினைவு கேடயம், கைக் கடிகாரம், வரலாற்று சார்ந்த புத்தகம், பள்ளிப் பை, கைப்பேசி கவர் போன்றவற்றை வழங்கினோம் என்கிறார் ஆ.முருகேசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.