நாட்டில் கோடையில் சுற்றிப் பார்க்கக் கண்ணைக் கவரும் சுற்றுலாத் தலங்கள் சிலவற்றை அறிவோம்.
குஞ்சுக்கல் நீர்வீழ்ச்சி
கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள 'குஞ்சுக்கல் நீர்வீழ்ச்சி'யில் 455 மீ. உயரத்திலிருந்து நீர் விழுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி என்பதோடு, ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய நீர்விழ்ச்சியும்கூட!
அடர்ந்த வனப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. வராகி நதியில் நிரம்பி இப்படி நீர் வீழ்ச்சியாகக் கொட்டுகிறது. அழகிய பாதைகள் வழியாக மலை ஏறும்போது, பறவைகள், வன விலங்குகளை வழியில் பார்க்கலாம்.
நீர்வீழ்ச்சி சக்தி வாய்ந்ததாகவும் இயற்கை அழகுடன் கூடியதாக உள்ளதால் பல்லுயிர் பெருக்கத்துக்கும் உதவுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையில் மழைக்காலத்தில் காண்பது சிறப்பு.
ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை சாலை வழியாக எளிதில் அடையலாம். உடுப்பி உள்பட பல நகரங்களிலிருந்து எளிதில் வரலாம். பெங்களுரிலிருந்து 73 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஜொலிக்கும் தீவுகள்
இந்திய தென் மேற்கு கடற்கரையிலிருந்து சிறகடிக்கப்பட்டது போல் காணப்படும் 36 தீவுகள்தான் லட்சத்தீவுகள். இதில் மக்கள் வசிக்காத பல தீவுகளில் பங்காரம் அடோல் எனப்படும் பவழத் தீவும் ஒன்று. இதனை 'வெப்ப மண்டலச் சொர்க்கம்' என்று அழைக்கின்றனர்.
வெள்ளை மணல் கடற்கரைகள், நீலமான வண்ணத்தைக் கொண்ட பளிங்கு போன்ற நீர் இங்கு காணப்படுகின்றன. இந்தத் தீவை பவழப் பாறைகள் சூழ்ந்து ஒரு நீச்சல் குளம் போல் ஆக்கியுள்ளது.
நடைபயிற்சி செய்யும்போது, இயற்கை அழகை ரசிக்கலாம். நீச்சல் சாகசங்களுக்கு ஏற்றது. ஸ்நோர் கெலிங், ஸ்கீயூபா டைவிங்குக்கு அருமையான இடம். இங்கு சூரியன் மறைவுக்குப் பின்னர், அமானுஷிய நீல ஒளியுடன் நீர் மின்னுகிறது.
லட்ச தீவுகளில் உள்ள 36 தீவுகளில் மூன்றில் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு அனுமதி. விசேஷ அனுமதியைப் பெற்று சென்ற ஒரு வெளிநாட்டு புகைப்படக்காரர் இரவில் ஜொலிக்கும் நீல வண்ணத்தைக் கண்டு திகைத்து படங்களை வெளியிட்டுள்ளார்.
சிவாபஞ்சாங்
மேற்கு சிக்கிமில், நேபாள எல்லையில் அமைந்துள்ள சிவபஞ்சாங் கணவாய் மிகவும் பிரபலம். இதனை சென்று பார்க்க 2022-இல்தான் சிக்கிம் அரசு அனுமதித்தது.இந்த பாதையில் பனிப் பாறை வெடிப்பு ,வெள்ளம் சகஜம்.
சிக்கிமின் மேற்கில் 10,300அடி உயரத்தில் கணவாய் உள்ளது. 10 கி.மீ. மலை ஏற வேண்டும். இதன் உச்சியில் நின்று கஞ்சன் ஜங்கா சிகரம், எவரெஸ்ட் சிகரத்தைத் தெளிவாகப் பார்க்கலாம். குருடோங்மர் ஏரியையும், தாங், யூமேசம்டாங் பகுதிகளையும் பனிப் படர்ந்த சூழலில் கண்டு களிக்கலாம்.
திடீர் பனிப் பொழிவு சகஜம். பருவமழை காலம் வரை பார்க்கலாம். காங்டாக் நகரிலிருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ளது.