
உலகில் செயற்கை நுண்ணறவு (ஏ.ஐ.) துணை கொண்டு உருவாக்கப்பட்ட முதல் படமான 'வேர் தி ரோபோட்ஸ் க்ரோ', 2024-இல் வெளியானது.
இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல் முதலாக உருவாகியிருக்கும் டிஜிட்டல் அற்புதம்தான் கன்னடப் படமான 'லவ் யூ' . படத்தில் நடிகர்கள், நடிகைகளை ஏ.ஐ.யில் கற்பனையாக, அழகாக உருவாக்கி நடிக்க வைத்திருக்கின்றனர்.
பெங்களூரு பகலகுண்டே ஆஞ்சநேயர் கோயிலில் புரோகிதராக பணியாற்றும் படத்தின் இயக்குநரான எஸ். நரசிம்மமூர்த்தி கூறியது:
'குறைந்த பட்ஜெட்டில், குறைந்த நேரத்தில் நடிகர்கள், இசைக் அமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இதர துறைகளின் கலைஞர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் இல்லாமல், ஒரு படத்தைத் தயாரிக்க முடிந்திருக்கிறது. எனது புனைவுக் கதையை ஏ.ஐ. மூலம் உயிர்ப்பிப்பது எனது கனவு. இதை நிஜமாக்க, கிராஃபிக் டிசைனர் நூதனின் உதவியை நாடினேன். கலைநோக்கில் 95 நிமிடங்கள் ஓடும் திரைப்படம் தயாரானது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
நானும் நூதனும் நடிகர்கள் முதல் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு அனைத்தையும் கையாண்டுள்ளோம். ட்ரோன் ஷாட்டுகளையும் ஏ.ஐ.யில் வடிவமைத்தோம். ஆறு மாதங்களில் பத்து லட்சம் ரூபாய் செலவில் முப்பது வெவ்வேறு ஏ.ஐ. யுக்திகளைப் பயன்படுத்தி, படத்தை நிறைவு செய்தோம். தயாரிப்பு செலவில் பெரும்பங்கு மென்பொருள் உரிமத்துக்காகச் செலவிடப்பட்டன. படத்தில் 12 ஒரிஜினல் பாடல்கள் சேர்த்துள்ளேன். ஆனால் வசனங்கள் ஏ.ஐ. வாயிலாக எழுதப்பட்டவை. புதுமைக்காக ஒரே ஒரு திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளேன்.
படத் தணிக்கையின்போது, சுட்டிக் காட்டப்பட்ட முரண்பாடுகளைச் சரி செய்தோம். நடிகர்களில் உணர்வுகளை வெளிப்படுத்தும் பல்வேறு முகப் பாவனைகளை சரியான முறையில் உருவாக்குவது ஒரு சவாலாக அமைந்திருந்தது. இருந்தாலும் இந்த புதிய முயற்சியை தணிக்கைக் குழு பாராட்டியது.
ஏ.ஐ. தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதோடு, தினமும் புதுப்பிக்கப்படுகிறது. நாங்கள் பயன்படுத்திய யுக்திகள் தற்போது பழையதாகிவிட்டன. 'லவ் யூ' படத்தை இப்போது மீண்டும் உருவாக்கினால், படம் ஆயிரம் மடங்கு சிறப்பாக அமையும். அடுத்து இரண்டு படங்களை ஏ.ஐ.யில் தயாரிக்க இரண்டு திரைக் கதைகள் தயாராக உள்ளன.
95 நிமிட காதல் நாடகமான 'லவ் யூ' வெறும் சினிமா பரிசோதனை மட்டுமல்ல; இது திரைப்படத் தயாரிப்பின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையம்கூட! மனிதர்களும் இயந்திரங்களும் ஆக்கபூர்வமாக ஒத்துழைக்கக் கூடிய ஒரு எதிர்காலத்தில் நாங்கள் அடியெடுத்து வைக்கிறோம்.
கதைகளைச் சொல்ல ஒரு புதிய வழியின் ஆரம்பம். திரைப்படம் தயாரிப்பதில் புது வழியை புது அணுகுமுறையை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்'' என்கிறார் நரசிம்மமூர்த்தி.