
உலகிலேயே மிகப் பெரிய ரயில்வேயாக இந்திய ரயில்வே விளங்கிவருகிறது. இதில், 158 ஆண்டுகளுக்கு முன்பே சேவையைத் தொடங்கிய ஹெளரா- கல்கா மெயில், 'இந்தியாவின் பழமையான ரயில்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்த ரயில் மேற்கு வங்கத் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஹெளராவை அரியாணாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள கல்கா நகரத்துடன் இணைக்கிறது.
ஹெளராவுக்கும் தில்லிக்கும் இடையே 1866-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் முதன்முதலில் இயக்கப்பட்ட ரயில் ஹெளரா- பெஷாவர் எக்ஸ்பிரஸ் ஆகும். பின்னர், இது 1891-இல் தில்லியில் இருந்து கல்கா வரை நீட்டிக்கப்பட்டது.
ஆங்கிலேய ஆட்சிக்கால ரயிலான ஹெளரா- கல்கா மெயில் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களால் கொல்கத்தாவில் இருந்து சிம்லா வரை பயணிக்கப் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் ரயிலின் பெயர் மூன்று முறை மாற்றப்பட்டது. முதலில் அது 'கிழக்கிந்திய ரயில்வே மெயில்' என்று அழைக்கப்பட்டது. பின்னர், 'கல்கா மெயில்' என்று பெயர் மாற்றப்பட்டது.
ஆங்கிலேய அலுவலர்களிடம் இருந்து தப்பிக்க, 1941-இல் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கேமோவில் இருந்து இந்த ரயில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது.
2021-இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஹெளரா- கங்கா மெயில் 'நேதாஜி எக்ஸ்பிரஸ்' என்று பெயர் மாறியது.
ஆங்கிலேய ஆட்சியில் தொடங்கப்பட்டு, சுதந்திர இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி சமகாலத் தேசத்தில் வளர்ச்சி அடைந்து, இந்த ரயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான மாற்றத்தைக் கண்டுள்ளது.