இசையும் காட்சியும் கவர்கின்றன..

இசையும் காட்சியும் கவர்கின்றன..

இந்திய ஊடகம், பொழுதுபோக்குத் துறையின் மைல் கல் நிகழ்வான 'வேவ்ஸ்' என்கிற உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு 2025 மும்பையில் ஜியோ வேர்ல்டு மாநாட்டு மையத்தில் நான்கு நாள்கள் அண்மையில் நடைபெற்றது.
Published on

இந்திய ஊடகம், பொழுதுபோக்குத் துறையின் மைல் கல் நிகழ்வான 'வேவ்ஸ்' என்கிற உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு 2025 மும்பையில் ஜியோ வேர்ல்டு மாநாட்டு மையத்தில் நான்கு நாள்கள் அண்மையில் நடைபெற்றது.

உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் துறையினர், ஊடக வல்லுநர்கள், திரையுலகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்க உரையாடல்களும், விவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்றன. மாநாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடல் காட்சி, சர்வதேசப் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. அந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி.

பாடல் காட்சியை உருவாக்கிய இயக்குநர் பரத் பாலா, சென்னைக்கு அண்மையில் வருகை தந்திருந்தபோது ஓர் சந்திப்பு:

வேவ்ஸ் உச்சிமாநாட்டுக்கான பாடல் எப்படி உருவானது?

முதல் முறையாக ஒரு பிரம்மாண்டமான மாநாடு நடக்கும்போது, இந்தியக் கலாசாரம், பண்பாடு, இந்திய பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சி, திறமை உள்ளிட்ட அனைத்தையும் சர்வதேசப் பிரதிநிதிகளுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், 'தீம் சாங்' உருவாக்க வேண்டும் என்று முடிவானது. இதற்கு ஆர்.ஆர்.ஆர். படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணியோடு இணைந்து உருவாக்கினோம்.

அனுபவம் எப்படி இருந்தது?

நான், ஏற்கெனவே 'தாய் மண்ணே வணக்கம்', 'வந்தே மாதரம்', 'ஜன கண மன' பாடல் காட்சிகளை உருவாக்கியுள்ளேன். அதன் பிறகு 'விர்சுவல் பாரத்' என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று அரிய பொக்கிஷமான விஷயங்கள்குறித்து நூற்றுக்கும் அதிகமான குறும்படங்களை எடுத்திருக்கிறேன்.

கரோனா காலத்தின்போது நாடே முடங்கிய காலத்தில் கூட மத்திய அரசின் பிரத்யேக அனுமதியுடன் பொது முடக்கத்தை முழுமையாக ஆவணப்படுத்தினேன். தனுஷ் நடித்த மரியான் உள்ளிட்ட சில திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறேன். எனது முப்பது ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் நாங்கள் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கினோம்.

பாடலை எழுதியது யார்? பாடியவர்கள் யார்? யார்?

இந்திய மண்ணின் இதயத்தை, இந்திய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பாடல் வரிகளும், காட்சிகளும் இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் செயலாளரான சஞ்சய் ஜாஜு மிகுந்த ஆர்வத்துடன் எழுதி இருக்கிறார்.

தமிழ், மராத்தி, வங்காளி, ஹிந்தி, ஆங்கிலம்.. என்று பல மொழிகளில் எழுதப்பட்ட வரிகளும் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளன. அந்தந்த மொழிக்குரிய பாடல் வரிகளை கே.எஸ்.சித்ரா, ஸ்ரேயா கோஷல், சோனு நிகாம், சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பலர் பாடி உள்ளனர்.

பாடலுக்கான வரவேற்பு பற்றி?

மொழி புரியாவிட்டாலும், இசையும், காட்சிகளும் வெளிநாட்டவர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. யூ டியூபில் வெளியான சில நாள்களிலேயே பல்லாயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

வேவ்ஸ் உச்சி மாநாடு குறித்து...?

'சர்வதேச தளத்தில் உலகின் முன்னோடி பொழுதுபோக்குத் துறை மையமாக இந்தியா விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கியிருக்கும் பயணத்தின் முதல் தடம் இது. இதுவரை பெரும்பாலும் இந்தியத் திரைப்படங்களை, இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியில் வசிக்கும் இந்தியர்களும்தான் பார்த்து ரசித்துகொண்டிருந்தனர்.

தற்போது அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓ.டி.டி. தளங்கள் வந்தவுடன் சப்-டைட்டில்களோடு கூடிய தமிழ்ப் படங்களுக்கு சர்வதேச அளவிலும் பார்வையாளர்கள் கிடைத்திருக்கின்றனர். இது காலப்போக்கில் இன்னும் விரிவடையும்.

அமெரிக்காவின் ஹாலிவுட் உலக ரசிகர்களுக்குப் படங்கள் தயாரிக்கின்றனர். அதுபோலவே இந்தியாவிலும் உலக ரசிகர்களைப் பெறத்தக்க வகையில் திரைப்படங்கள் தயரிப்பதற்கு இது வழி வகை செய்யும்.

வேவ்ஸ் போன்ற மாநாடுகள், சினிமாவில் நுழைய வேண்டும், சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் இளையத் தலைமுறையினருக்கு, அந்தத் துறையின் சர்வதேச ஆளுமைகளை சந்திக்க, அவர்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள, அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆண்டுதோறும் இந்த வேவ்ஸ் உச்சி மாநாடு இந்தியாவில் நடக்க இருக்கிறது என்பது ஒரு வரவேற்கத்தக்க முடிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

X
Open in App
Dinamani
www.dinamani.com