
நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் ஆகியோரை வைத்து ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், நித்யா மேனன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படத்திற்கு "தலைவன் தலைவி' எனப் பெயரிட்டு கடந்த மே 3-ஆம் தேதி டைட்டில் டீசர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த டைட்டில் டீசரும் தற்போது மக்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. படத்தில் பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
நடிகை சமந்தா தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளின் நடித்த சமந்தா, தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார். பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் மே 9-ஆம் வெளியாகியுள்ள "சுபம்' என்ற தெலுங்கு படத்தை சமந்தா தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சமந்தா பேசும் போது... "நான் எப்போது எல்லாம் விசாகப்பட்டினம் வருகின்றேனோ, அப்போதெல்லாம் ஒரு பிளாக்பஸ்டர் படம் வந்துவிடும். விசாகப்பட்டினத்தில் படமாக்கப்பட்ட மஜ்லி, ஓ பேபி, ஆகிய படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன' என்று பேசியிருந்தார்.
"ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தை புதிய யோசனையுடன் தொடங்கினேன்' என்று "சுபம்' படம் குறித்து சமந்தா கூறினார். இந்த நிலையில் அவ்வப்போது சமந்தா மேடையில் கண்கலங்குவதை போன்ற விடியோக்கள் வைரலாகியுள்ளன.
தக்ஷன் விஜய், "முருகா' அசோக், சாந்தினி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடிப்பில் வளர்ந்து வரும் படம் "ஐ அம் வெயிட்டிங்'. மகிழ் புரொடக்ஷன்ஸ் சி.பியூலா தயாரிக்கிறார். என்.பி.இஸ்மாயில் இயக்குகிறார். கறிக் கடை நடத்தி வரும் ஏழை குடும்பத்தில் பிறந்த அண்ணன், தங்கையை மையமாக வைத்து பாசம் மற்றும் ஆக்ஷன் கதையாக உருவாகியுள்ளது.
சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ஏ.ஆர்.ரெஹனா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு கே.கே.சாதிக், எடிட்டிங் ராமர், கலை கார்த்திக், சீனு, சண்டை பயிற்சி கிக்காஸ் காளி. சென்னை , கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வரவுள்ளது இப்படம்.
அரசு திரைப்படக் கல்லூரியில் மாணவர் தர்மா எழுதி, இயக்கும் படம் "ஆகக் கடவன'. ஆதிரன் சுரேஷ் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடிக்கின்றனர். நெடுஞ்சாலையில் பஞ்சரான பைக்கோடு தன் நண்பனுடன் காத்திருக்கும் ஹீரோவிற்கு, அடுத்தடுத்து அங்கு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதுதான் திரைக்கதை.
அவன் வாழ்க்கையையே ஆபத்தில் கொண்டு சேர்க்கிறது ஒரு சமபவம். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்வதுதான் களம். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் லியோ வெ ராஜா. நெடுஞ்சாலைகளிலும், முள் காடுகளிலும், பாக்கு மரத் தோப்பிலும் பயணிக்கும் இவரது கேமரா கோணங்கள் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளது.