'எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக்கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களைக் கடந்த சினிமா எங்கேயும் இல்லை. எதார்த்தங்களில் இருந்து கதையைப் பிரிக்கவே முடியாது.
அதில் வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அதுதான் உலகத் தரம்.' என்று சினிமாக்களின் அடிப்படையை அளந்து பேசுகிறார் இயக்குநர் பி.வி.பிரசாத். 'காதலில் விழுந்தேன்' படத்தை இயக்கி ஈர்த்தவர். இப்போது 'சகுந்தலாவின் காதலன்' படத்தை இயக்குவதுடன், நடிகராகவும் அடுத்தக்கட்டத்துக்குச் செல்கிறார்.
தலைப்பின் வழியாக எதுவும் சொல்ல வர்றீங்களா?
கதையின் மனசாட்சியை தலைப்பு பிரதிபலிக்க வேண்டும். அதற்காகத்தான் 'சகுந்தலாவின் காதலன்' என்ற தலைப்பு. காந்தியும் ஹிட்லரும் ஒரே வீட்டில் இருந்தால் எப்படியிருக்கும்? அப்படி எழுகிற ஒரு சூழலைக் கடக்கிற சில மனிதர்களின் கதைதான் இது. சந்தோஷத்தை எதிர்கொள்கிற அதே நேரத்தில், உண்மையைப் பார்த்தால் மனுஷனுக்கு அவ்வளவு பயம். இதுதான் வாழ்வின் பெரும் சவால்.
சந்தோஷத்தை அடைவதற்காக ஒரு பொய் சொல்கிறோம்.
அது அந்த நேரத்தில் அழகாக இருக்கும். கிரீடமாக ஜொலிக்கும். ஆனால், உண்மை அம்மணமாக நிற்கும். ஒரு கட்டத்தில் ஏசுநாதர் தலையில் இருந்த முள் கிரீடம் மாதிரி குத்தும். அதனால்தான் உண்மையைக் கண்டு ஓடி ஒளிகிறோம். சந்தோஷம் மட்டுமே கண்ணுக்குத் தெரிய, பொய் துரத்த... உண்மை நெருக்க... பலர் சாமியாராக திரிகிறார்கள்.
சிலர் மன நோயாளிகளாக மாறுகிறார்கள். என்னைக் கேட்டால், உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. அது வலிக்கும். உயிரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படி ஓர் அனுபவம் இங்கே சிலருக்குக் கைகூடி வருகிறது. அதை ஐந்து கோணங்களின் வழியே கடத்தியிருக்கிறேன்.
உள்ளடக்கம் பற்றிப் பேசினால் இன்னும் கொஞ்சம் தெளிவு பிறக்குமே...
பிரசவம் பார்க்க நாட்டிலேயே அதிக வசதி இருக்கிற மருத்துவமனையில் சேர்க்கலாம். ஆனால், தாய் அனுபவிக்கிற அந்த வலிக்கு என்ன பணம் தரமுடியும்? இருப்பதிலேயே சிறந்த உணவை வாங்கிவிடலாம். ஆனால், பசி என்ன விலை கொடுத்தால் வரும்? எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான், மனிதம் மட்டும் மலிவாகிவிட்டது.
பணம் வாழ்க்கையில் இரண்டாம்பட்சமாகிவிட்டால், உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதிப் பிரச்னைகள் இல்லாமல் போய்விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள். நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள் கிடைப்பார்கள்.
சரிபாதி குற்றங்கள் தொலைந்துவிடும். தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்குப் பணம் இல்லை. பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்கத் தெரிந்துவிட்டால், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம். வயிற்றுப் பசிக்குச் சாப்பிடத்தான், நமக்குப் பணம் தேவை. ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும்போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது.
இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள்.
தயாரிப்பு, இசை, இயக்கம், நடிப்பு எல்லாப் பக்கங்களிலும் இருக்கீங்க... இது பெரிய அழுத்தம் இல்லையா?
எங்கே போகிறோம்? எப்படிப் போகிறோம்? எங்கே தங்குகிறோம்? என்னென்ன பார்க்கப் போகிறோம்? என இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஏற்கெனவே தீர்மானித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன்.
சம்பாதிப்பதை நல்லபடியாக சேர்த்து வைத்துக்கொள்ளாமல் நீயே சினிமா தயாரிப்பதெல்லாம் தேவையா என்று கேட்காதவர்கள் இல்லை. அப்போதெல்லாம் மனசுக்குப் பிடித்ததைத்தானே செய்கிறோம் என உள்ளுக்குள் ஓர் அலை அடிக்கும். அருவா, ஆபாசம் என நாடு போற்றும் வெள்ளிவிழாப் படங்களை எடுத்தால், சமூகத்தைக் கெடுக்கிறீங்களே என்று கேட்கலாம்.
சமூகத்தின் தற்போதைய தேவை உணர்ந்து நான் எடுத்து வைக்கிற ஒரு கதை இது. இதை நானே தயாரிக்கலாம் எனத் தோன்றியதால் தயாரிக்கிறேன். அவ்வளவுதான். இசையும் அப்படித்தான். எல்லாம் கேள்வி ஞானம்தான். இங்கே யாரும் சுயம்பு கிடையாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
அனுபவங்கள் மூலமாகவே நான் எதையும் புரிந்துகொள்ள விரும்புகிறேன். உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கவும் ரசிக்கவும்தானே வாழ்க்கை. என் வாழ்க்கையை நானே வாழ்ந்து பார்க்கும் தருணம் இது.
பசுபதி, சுமன், கருணாஸ் என நடிகர்கள் நிறைந்திருக்கிறார்களே....
எல்லோருக்கும் நல்ல மனசு உண்டு. கதையையும், அதன் தன்மையையும் புரிந்துகொண்டு எவ்வளவு பணம் வேண்டும் எனக் கேட்டவர் சுமன் சார். நான் ரொம்பவே மதிக்கிற பசுபதி, கருணாஸ் இருவரின் பங்கும் இதில் சேர்ந்ததில் மகிழ்ச்சி. நான் கடவுள் ராஜேந்திரன் அண்ணன் அப்படி ஒரு ஒத்துழைப்பு தந்தார். 'தாமிரபரணி' பானு கதையோடு அவ்வளவு பொருந்தியிருக்கிறார்.
கவிஞர், எழுத்தாளர் அ.வெண்ணிலா படத்துக்கு வசனம். இது எனக்குப் பெரும் பலம். ஃபிலிம் ரோலில் சினிமா எடுப்பதில் அவ்வளவு திருப்தி உண்டு. அதற்காகவே இதை முழுக்க முழுக்க ஃபிலிம் ரோலில் எடுத்து வந்திருக்கிறேன்.
அறிவுமதி அண்ணனின் மகன் ராசாமதி கேமரா. அவரின் பெரும் பயணத்தின் அத்தாட்சியாக இது இருக்கும். லட்சக்கணக்கான மக்களைச் சென்று சேரக்கூடிய சினிமாவுக்கான பொறுப்பை உணர்ந்து உழைத்திருக்கிறேன். எல்லாம் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நவீன கல்வியும், பாரம்பரிய அறிவும்...
நல்ல சினிமாக்கள் பற்றி நிறைய கனவு உண்டு!
பசித்தவனுக்கு ரொட்டியே கடவுள்!
கதையின் மனசாட்சியை பிரதிபலிக்கும்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


