கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

மாற்றுத்திறனாளிகள் தங்களின் குறைகளையே எண்ணத் தொடங்கி ஒதுங்கிவிடுதல் சரியானதல்ல.
கடின உழைப்பு... வளமான எதிர்காலம்
Updated on
1 min read

'மாற்றுத்திறனாளிகள் தங்களின் குறைகளையே எண்ணத் தொடங்கி ஒதுங்கிவிடுதல் சரியானதல்ல. அவர்கள் தங்கள் திறன்களைக் கண்டறிய வேண்டும். அதை வைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வாய்ப்புகள் வரும். கடின உழைப்பே வளமான எதிர்காலத்தின் முக்கிய திறவுகோல்'' என்கிறார் தான்யா சி. நாதன்.

நாட்டின் முதல் பார்வை குறைபாடுள்ள சிவில் நீதிபதியாக, கேரளத்துக்கு உள்பட்ட கண்ணூரைச் சேர்ந்த தான்யா சி நாதன் தேர்வு பெற்றுள்ளார். இருபத்து நான்கு வயதான இவர், சட்டப் படிப்பில் முதல் ரேங்க் பெற்றவர். கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற சிவில் நீதிபதிகள் (ஜூனியர் பிரிவு) தேர்வுக்கான நீதித்துறை சேவைத் தேர்வில், அங்க குறைபாடுகள் உள்ளவர்களின் தகுதிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அவர் கூறியது:

'பிறவிலேயே எனக்குப் பார்வை இல்லை. பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் 7 -ஆம் வகுப்பு வரை படித்தேன். பின்னர், கண்ணூரில் உள்ள சாதாரண பள்ளிகளில் பிளஸ் டூ வரை படித்தேன். சட்டப் படிப்பில் முதல் ரேங்க்கில் தேர்ச்சி அடைந்தேன். சட்டப்படிப்பை பிரெய்லி, திரை வாசிப்பு மென்பொருளைப் பயன்படுத்தி படித்தேன். கண்ணூரில் உள்ள தளிப்பரம்பாவில் வழக்குரைஞர் கே.ஜி. சுனில்குமாரிடம் பயிற்சியைத் தொடங்கினேன்.

'பார்வைக் குறைபாடுள்ளவர்கள் நூறு சதவீதம் நீதித்துறைக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது' என்ற வெளிப்படையான தடை இருந்தது. இருப்பினும், 2025-இல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோரால் அளிக்கப்பட்ட தீர்ப்பில், 'பார்வை குறைபாடுள்ளவர்களை நீதித்துறையின் சேவைக்குப் பொருத்தமற்றவர்கள் என்று கூற முடியாது. அவர்கள் நீதித்துறைத் தேர்வில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள்' என்று கூறப்பட்டிருந்தது. இதனடிப்படையில் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தேன்.

பிரெய்லி எழுத்துகளைப் பயன்படுத்தி, குறிப்புகளை எடுத்து என்னைத் தயார் செய்தேன். பலர் 'முடியுமா?' என்றெல்லாம் வினவினர். தளராமல் படித்தேன். தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளேன். அரசு நியமன ஆணைக்காகக் காத்திருக்கிறேன்.

சிவில் நீதிபதியாக என்னால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கான சூழ்நிலை குறைவாக உள்ள அரசு உள்கட்டமைப்புகள் சில காலங்களுக்கு எனக்கு சவாலாக அமையும்'' என்கிறார் தான்யா சி நாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com