கண்ணபிரான் வெண்ணெயைத் திருடி உண்டு, அதற்காகக் கல் உரலில் கட்டுண்டு, வீதிக்கும் அதை இழுத்து வந்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், அவன் திருடியதற்காகப் பாவம் அந்தக் கல் உரலும் வீதியில் உருண்டு உருண்டு தேயவேண்டுமா என்ன? காரணம் இதுதான்.
சிறுவனாக இருந்த கண்ணன், உயரத்தில் உறியில் இருந்த வெண்ணெய்யை எப்படி எடுத்தான் என யசோதை கேட்டதற்கு, குனிந்து கொடுத்துத் தம்தம் முதுகில் ஏறி எடுக்க உதவிய கோகுலத்து நண்பர்களைக் காட்டிக்கொடுக்கக் கூடாது என்பதற்காக, பக்கத்தில் இருந்த உரல் மேல் ஏறித்தான் அந்த உறி வெண்ணெய்யை எடுத்ததாக யசோதையிடம் கண்ணன் பொய்கூற, உடனே யசோதையின் கோபம் உரல்மீது திரும்பியது.
அப்படி உதவிய அந்த உரலும் கண்ணனாலேயே தேயட்டும் என்பதற்காகத்தான் அவன் இடையிலேயே அந்த உரலைக் கயிற்றோடு பிணித்து அவனையே இழுக்கச் செய்துவிட்டாள், தாய் யசோதா!
இப்படி யசோதா கொடுத்த தண்டனைதான் கண்ணனால் உரலும் தேய இழுக்கும்படி ஆயிற்று என்கிறார் ஒரு புலவர்.
""கண்ணனின் வெண்ணெய்க் களவுக்காய்ப் பாவம்உரலை
திண்ணன் அவன்இழுக்கத் தேய்வதென்ன? - வெண்ணெய்க்(கு)
அவன்ஏற வாய்த்ததனால் அன்னைய சோதைதான்
நவம்நேரத் தக்கதண் டனை'' (தனிப்பாடல்)