இந்த வார கலாரசிகன்

நினைவு தெரிந்து என்னை பத்திரிகைகள் படிக்கத் தூண்டிய எழுத்துகள் இருவருடையது. நடுநிலைப் பள்ளி மாணவனாய் வீட்டிற்கு வரும் ஆனந்த விகடனைப் படிக்க அப்போதெல்லாம் போட்டி நடக்கும்.
இந்த வார கலாரசிகன்

நினைவு தெரிந்து என்னை பத்திரிகைகள் படிக்கத் தூண்டிய எழுத்துகள் இருவருடையது. நடுநிலைப் பள்ளி மாணவனாய் வீட்டிற்கு வரும் ஆனந்த விகடனைப் படிக்க அப்போதெல்லாம் போட்டி நடக்கும். தேவனின் மறைவுக்குப் பிறகு கோபுலுவின் படங்களுடன் சித்திரக் கதையாக வெளிவந்த துப்பறியும் சாம்புவும், சாவியின் வாஷிங்டனில் திருமணமும்தான் அந்த ஆர்வத்தை ஏற்படுத்தக் காரணம்.

உயர்நிலைப் பள்ளி மாணவனான பிறகு, "கல்கி' வார இதழில் மறுபதிப்பாக வெளிவந்த "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின் சபதம்', "பார்த்திபன் கனவு' போன்ற கல்கியின் படைப்புகள் கதை படிக்கும் பழக்கத்தை நிலைநிறுத்தின. இன்றுவரை, வார சஞ்சிகைகள் ஒன்றுவிடாமல் படித்து விடுகிறேன், குறைந்தபட்சம் புரட்டிப் பார்த்துவிடுகிறேன் என்றால் மேலே குறிப்பிட்ட மூன்று பேரும்தான் அதற்குக் காரணம்.

தேவன் நூற்றாண்டு விழாவையொட்டி தொகுக்கப்பட்டிருக்கும் "தேவன் வரலாறு' என்கிற புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தபோது, துப்பறியும் சாம்புவும், இன்ஸ்பெக்டர் கோபாலனும் கண் முன்னே நடமாடும் கதாபாத்திரங்களாக இன்றைக்கும் மனதில் பதிந்திருப்பதை உணர்ந்தேன்.

44 வயதில் தேவன் என்கிற மகாதேவன் காலமாகிவிட்டார். முழுநேர எழுத்தாளனாக அவர் இருந்தது என்னவோ ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் மட்டுமே. அதற்குள் அவர் படைத்திருக்கும் படைப்புகள் 31. துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகந்நாதன், மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம், கோமதியின் காதலன் முதலியவை காலாகாலத்திற்கும் தேவனின் பெயரை நிலைநிறுத்தும் படைப்புகள்.

"கல்கி ஒரு காந்த சக்தி. அந்த சக்தி எழுத்தாளர் உலகத்தில் என்றென்றும் இருக்கும்' என்று கல்கியின் மறைவின்போது எழுதினார் தேவன். அது அவருக்கும்தான் பொருந்தும்.

கல்கியைப் போலவே, தேவனுக்கும் நகைச்சுவை என்பது இயல்பாகவே பேனாவில் வந்து கொட்டும். தேவன் ஆசிரியராக இருந்தபோது விகடனில் ஒரு துணுக்கு. ""என்ன சார், இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டீர்களா?'' என்கிற கேள்விக்குத் தரப்பட்ட பதில் ""இல்லை. இப்போதுதானே விமர்சனம் எழுதி முடித்திருக்கிறேன்'' என்பது. பல புத்தக விமர்சனங்கள் இப்படித்தான் இப்போதும் எழுதப்படுகின்றன என்பதுதான் வேடிக்கை.

ஏனைய படைப்பிலக்கியவாதிகளுக்கும் தேவனுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அவருடைய கதாபாத்திரங்கள் அந்நியப்பட்டவையாக இருக்காது. நாம் சந்திக்கும், அல்லது நமக்கு எங்கேயோ தெரிந்த நபர்களின் சாயல் அவரது கதாபாத்திரங்களில் இருக்கும். சம்பவங்களும் சரி, யதார்த்தமாக இருக்கும்.

"கல்கி' என்கிற மிகப்பெரிய ஆளுமை அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்வது என்பது எளிதான ஒன்றல்ல. கல்கி விலகியதுடன் ஆனந்த விகடன் அழிந்துவிடும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏராளம். 1940-இல் கல்கி வெளியேறியபோது துமிலனும் அவருடன் வெளியேறினார் எனும்போது, இனி என்னவாகும் என்கிற பயம் ஆனந்த விகடன் அதிபர் ஜெமினி எஸ்.எஸ். வாசனையேகூட சற்று நிலைகுலைய வைத்தது என்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் ஆனந்த விகடனைத் தாங்கிப் பிடித்தவர் தேவன். விகடனின் பொறுப்பாசிரியராக தேவன் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

"தேவன் வரலாறு' புத்தகத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் பதிவு நிஜமாகவே யோசிக்க வைக்கிறது. ""தேவன் ஒரு காலகட்டத்தில் வெகுஜன எழுத்துக்கு முக்கியமான முன்னோடி. கல்கி அளவுக்கு அவருக்கும் பல திறமைகள் இருந்திருக்கின்றன. அவரும் கல்கியைப் போல் ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வந்து தனியே ஒரு பத்திரிகை துவங்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது'' என்பதுதான் சுஜாதாவின் பதிவு. அதை நானும் வழிமொழிகிறேன்.

கல்கியில் "கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்தியும், ஆனந்த விகடனில் "தேவன்' என்கிற மகாதேவனும் ஆசிரியராக இருந்த காலகட்டம் தமிழ் பத்திரிகை உலகின் பொற்காலம்.

தேவனின் சகோதரி மகனான கே. விஸ்வநாதன் (அன்னம்) எழுதுகிறார்-- ""எனக்குத் தெரிந்து மாமாவுக்கு இருந்த மனக்குறை ஒன்றுதான். அவர் தனது படைப்புகளைப் புத்தகங்களாகக் கொண்டு வர "ஆனந்த விகடன்' நிறுவனம் அனுமதி மறுத்துவிட்டது. சொல்லிச் சொல்லி வருத்தப்படுவார். இப்போது, தேவனின் நூற்றாண்டு விழாவையொட்டி அவர் நினைவால் அமைந்திருக்கும் அறக்கட்டளை மூலம் அவரது ஆசை நிறைவேற்றப்பட்டதே அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும்'' என்கிறார் அன்னம்.

எனக்கும் நீண்ட நாளாக ஒரு மனக்குறை இருந்தது. தேவனின் அத்தனை புத்தகங்களும் எனது தனி நூலகத்தில் இடம் பெற வேண்டும். கல்கியின் படைப்புகளை அவ்வப்போது எடுத்துப் படித்து மகிழ்வது போல, தேவனின் படைப்புகளையும் நினைத்தபோதெல்லாம் படித்து மகிழ வேண்டும் என்கிற அந்தக் குறை இனி தீர்ந்தது - அல்லயன்ஸ் சீனிவாசனுக்கும், சாருகேசிக்கும் நன்றி!

--------------------------------

பொதுவாக எனக்கு மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் படிப்பது பிடிக்காது. ஆங்கிலப் புத்தகங்களாக இருந்தால் மூலத்தை

வாங்கிப் படித்து விடுவேன். வேறு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்

பட்டிருந்தால், முடிந்தவரை தவிர்த்து விடுவேன். காரணம் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால்.

அதற்காக ஹோமரையும், அரிஸ்டாட்டிலையும் சாக்ரடீசையும், ப்ளூட்டோவையும் கிரேக்க மொழியிலா படிக்க முடியும்? அதனால் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படிக்கிறேன்.

மொழிபெயர்ப்புகள் கூடாது என்பதல்ல எனது வாதம். மூலத்தின் தரங் கெடாத நல்ல மொழி பெயர்ப்புகள் வரத்தான் செய்கின்றன. அவை தேவையும் கூட.

அதேபோலத்தான், சுய முன்னேற்றப் புத்தகங்களும், வசியம், ஹிப்னாட்டிசம், மனோதத்துவம் சார்ந்த புத்தகங்களும். இந்தப் பட்டியலில் நிர்வாக மேலாண்மை சார்ந்த புத்தகங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அதற்காக நான் ஏதோ புதினங்களை மட்டுமே படிப்பவன் என்றும் எடைபோட்டு விடாதீர்கள். இலக்கியம், பொருளாதாரம், சரித்திரம், அரசியல் என்று எனது விருப்பங்கள் விரிந்து பரந்தவை.

அன்று ஏனோ வித்தியாசமான எண்ணம். மாறுதலுக்காக என். கணேசன் என்பவர் எழுதிய "ஆழ்மனதின் அற்புத சக்திகள்' என்கிற புத்தகம் கண்ணில் பட்டது. எடுத்துப் படித்தேன். கோவையில், வங்கி ஒன்றில் பணிபுரிபவர் என்று அட்டை குறிப்பு சொன்னது. புரட்டிப் படிக்கப் படிக்க, எத்தனை எத்தனையோ புதுப்புதுச் செய்திகள், எடுத்துக்காட்டுகள், விளக்கங்கள். நிஜமாகவே நான் வசமிழந்து விட்டேன்.

"விபத்துக்களை முன்கூட்டியே அறிந்தவன்', "இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டிய ஆழ்மன சக்தி', "மறுபிறவி நினைவுகள் உண்மையா?', "நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி' ஆகிய கட்டுரைகள் எனக்கு புதியதொரு பார்வையை ஏற்படுத்தின.

ஒருமுறை படித்துவிட்ட புத்தகத்தை இப்போது மீண்டும் ஒருமுறை படிக்க எடுத்து வைத்திருக்கிறேன். நான் முதலில் சொன்ன கருத்துக்களை இனிமேல் மாற்றிக் கொண்டாக வேண்டும் - மொழிபெயர்ப்பு உள்பட!

--------------------------------

நாஞ்சில் பி.சி. அன்பழகன் துடிப்பான இளைஞர். திரைப்பட இயக்குநர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகப் பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர்

என்று துறுதுறுவென்று இயங்கிய வண்ணம் இருப்பவர்.

இவரது "விதைக்குள் விழுதுகள்' புத்தகத்துக்கு அணிந்துரை எழுதி இருப்பவர்கள் வல்லிக்கண்ணன், பொன்னீலன், கவிஞர் முத்துலிங்கம், மேலாண்மை பொன்னுசாமி, மு. மேத்தா - இதற்குப்

பிறகு நான் என்ன இவரைப் பற்றிச் சொல்ல இருக்கிறது?

"விதைக்குள் விழுதுகள்' - அவருடைய கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய தொகுப்பு. அதிலிருந்து "கிரிக்கெட்' பற்றி ஒரு கவிதை -

இந்தியா தோற்றதால் ரசிகர்கள் அழுதார்கள் வீரர்களோ மேட்ச் பிக்ஸிங்கில் ஜெயித்ததற்காக சிரித்துக் கொண்டார்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com