ஆங்கிலேயர்கள் முறைப்படி இரவு 12 மணிக்கு மேல் நாளின் தொடக்கம் நடைமுறையில் உள்ளது. ஆனால், நாழிகையின் கணக்குப்படி காலையிலிருந்து நாள் தொடங்குகிறது. அதாவது, பகலிரவு அறுபது நாழிகை முடிந்த பிறகு காலையிலிருந்து நாள் தொடங்குகிற கணக்கும் நடைமுறையில் உள்ளது.
சங்ககால இலக்கியங்கள் தமிழருக்கு நாளின் தொடக்கம் பகல் 12 மணிக்கு மேல் என்று தெரிவிக்கின்றன. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலிய இலக்கியங்களில் குறிஞ்சித்திணை, பாலைத்திணை,
நெய்தல் திணை ஆகியவற்றில் இதைக் காணலாம்.
""ஆர்கலி வானம் தல்இ நடுநாள்'' (நற்.குறி.53)
குறிஞ்சித் திணைக்குரிய சிறுபொழுது யாமம் அதாவது நள்ளிரவு. நள்ளிரவு "நடுநாள்' என்றால், நண்பகல் நாளின் தொடக்கமாகும்.
""உரவு உரும் உரறும் அரைஇருள் நடுநாள்'' (நற்.குறி.68)
""நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம்'' (நற்.குறி.125)
""நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே'' (நற்.குறி.129) மேலும் நற்றிணையில், குறி.168, 228, 257,285, பாலை.281, நெய்.149, மருதம்-290 ஆகிய பாடல்களிலும் நடுநாள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
""யாம நடுநாள் துயில்கொண்டு ஒளித்த'' (கலி.122:21)
""பெயலான்று அவிந்த தூங்கிருள் நடுநாள்'' (அக.ம.பவளம்.குறி.158)
""விளிவுஇடன் அறியா வான்உமிழ் நடுநாள்'' (அக.மணி.பவளம்,குறி.162)
""நடுநாள் வருதலும் வரூஉம்'' (குறு.கு.தி.88)
""ஆர்இருள் நடுநாள் வருதி'' (குறு.குறி.141)
""நரை உரும் உரறும் அருஇருள் நடுநாள்'' (குறு.முல்லை.190, குறு.குறி.268, (குறு.குறி.321, குறு.பாலை.329)
""நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்'' (புறநா.189)
இதுகாறும் காட்டிய காட்டால் "நடுநாள்' என்பது நள்ளிரவாகிய "யாமம்' என்பது புலனாகிறது. கதிரோன் நிலநடுக்கோட்டுக்கு (பூமத்தியரேகை) நேர் வரும் நாள் சித்திரைத் திங்கள் முதல் நாளாகும். கதிரோன் நடுக்கோட்டில் தோன்றும் நாளிலிருந்து ஆண்டின் பிறப்பைக் குறிப்பது போல பகலின் பன்னிரண்டு மணியில் சூரியன் உச்சிக்கு வரும் பொழுதிலிருந்து நாளின் தொடக்கமாகக் கொண்டிருக்கலாம்.