இறைவன் அனுப்ப இந்த உலகில் வந்து அவதாரம் (பிறந்தேன்) செய்தேன் (வருவிக்க உற்றேன்) என்று கூறும் அருட்பிரகாச வள்ளலார், இறைவனால் பல்வேறு வரங்கள் கைவரப்பெற்றவர். அவை வருமாறு:
வல்லப சக்திகள் வகையெல்லாம் பெற்றார்.
கதிர்நலம் இரு கண்களில் பெற்று அதிசயம் இயற்றினார்.
சாகா வரம் பெற்று சதுரர் ஆனார்.
பொன்னுடம்பு பெற்றார்,
சித்தருக்கெல்லாம் சித்தர் ஆனார், பொன் செய்யும் ஆற்றலைப் பெற்றார்.
இறந்தவரை எழுப்பினார், அருளமுதம் கிடைக்கப் பெற்றார்.
அண்ட கோடிகளை அரைக்கணத்தில் கண்டார்.
தன் உடம்புக்குள்ளே சிவனுருவைக் கண்டார்.
அருட்ஜோதியாக, அருட்சுடராக அமர்ந்தார்.
காற்றாகி கனலாகி புலனாகி நின்றார்.
புவியினுள் புவியாய் புவிநடுப் புவியில் நுழைந்தார்.
அருள் புரியும் ஆற்றலைப் பெற்றார்.
ஏறாநிலை மிசையேறி ஆறாறு 36யும் கண்டார்.
அருட்பதம் அளிக்கப்பெற்றார்.
அடிமுடி கண்டார், எட்டும் இரண்டும் தெரிந்தார் - தெளிந்தார்.
தண்ணீரில் விளக்கெரிக்கும் திறம் பெற்றார்.
சாகாக்கலை நிலை பெற்றார், ஆழி அணியப் பெற்றார்.
சிவரகசியமெல்லாம் தெரிவிக்கப் பெற்றார்.
நவவகை அமுதம் நன்றே உண்டார்.
பசி தவிர்க்கப் பெற்றார், சிவபெருமானுக்கு மகன் ஆனார்.
கலக்கத்தையும் அச்சத்தையும் தவிர்த்தார்.
தன்னிகரில்லாத் தலைவனைக் கண்டார்.
சித்திகளெல்லாம் தெளிந்திடக் கண்டார்.
தூக்கத்தையும் சோம்பலையும் தவிர்த்தார்.
அகத்திலும் புறத்திலும் ஜோதியைக் கண்டார்.
இறைவனுடைய சித்திகள் அனைத்தையும் தன் சித்திகளாக்கிக்கொண்டார்.
தனியருட் ஜோதியை இறைவனிடம் பெற்றார்.
இரவும் பகலும் இறைவனோடு கலந்திருந்தார்.
படிகளைக் கடந்தார் பதநிலைப் பெற்றார்.
உடற்பிணி உயிர்ப்பிணிகளைத் தவிர்த்தார்.
நரை திரை மூப்பு நணுகாவண்ணம் இளமையோடிருக்க வரம் பெற்றார்.
அற்புதம் அனந்தகோடி செய்யப்பெற்றார்.
எண்ணியபடியெல்லாம் விளையாடுக எனப்பெற்றார்.
உடலெலாம் அமுதம் நிரம்பியோடப் பெற்றார்.
(அக்.5 வள்ளலார் அவதார தினம்)