பழமொழி நானூறு
கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாத(து) இல்லை ஒருவற்கு - நல்லாய்
இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. (பா-64)
நற்குணமுடைய பெண்ணே! தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினின்றும் வழுவுதலின் மிக்க தாழ்வு ஒருவற்கு இல்லை. தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதலின் மிக்க உயர்வு ஒருவற்கு இல்லை (ஆகையால்), கல்வியறிவுடைய ஒருவனுக்கு, நூல்களைக் கல்லாதவரிடத்து விரித்துக்கூறும் கட்டுரையைப் பார்க்கிலும் தீமை தருஞ் செயல் பிறிதொன்றில்லை. (1) "இழுக்கத்தின் மிக்க இழிவில்லை' (2) "ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை' - இவை இச்செய்யுளிற் கண்ட பழமொழிகள்.