பழமொழி நானூறு
கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பரால்
எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும்
உண்ணுந் துணைக்காக்கும் கூற்று. (பா-89)
ஆராய்ந்து உயிரை உண்ணும் பொருட்டு, விரும்பித் திரிவானேயாயினும், தான் உண்ண வேண்டிய காலம் வருமளவும் உயிரைப் பாதுகாத்து நிற்பான் (அதுபோல), கண்ணினுள்ளேயிருக்கும் கருமணியைப்போல், தம் கருமத்தின் மேல் உள்ள ஆசையால் தம்மோடு நட்பு செய்தவர்களும், தமக்கு ஆக வேண்டிய கருமம் முடிந்தது என்று நினைத்த அளவில் முன்னர் இருந்தவராக அன்றி வேறொருவராக நிற்பர். "எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும் உண்ணுந்துணைக் காக்கும் கூற்று' என்பது பழமொழி.