பழமொழி நானூறு
ஒற்கந்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்
நிற்பவே நின்ற நிலையின்மேல் - வற்பத்தால்
தன்மேல் நலியும் பசிபெரி(து) ஆயினும்
புன்மேயா தாகும் புலி. (பாடல்.119)
பஞ்சத்தால் புலியானது தன்னிடத்து வருத்தும் பசி மிக்கு வருந்தியதானாலும் புல்லினை மேயா தொழியும். (அதுபோல) அறிஞர்கள் வறுமையைத் தாம் அடைந்த இடத்தும் தாம் முன்பு இருந்த நிலையிலேயே நிற்பார்கள். (க-து.) பெரியோர் வறியராயினும் தம் நிலையினின்றும் திறம்பார். "பசி பெரிது ஆயினும் புல் மேயாதாகும் புலி' என்பது பழமொழி.