பழமொழி நானூறு
சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலைக் கழிந்ததன் பின்றையும் - மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை இல். (பா-93)
அறிவு நிரம்பிய அமைச்சர்கள், மிகுதியானவற்றைக் கூறி இது பெருங்குற்றமல்ல வென்று மறைத்து, அதற்கு மறை மொழிந்தபடி செய்தலே அறமென்று பாதுகாவலும் செய்து அரசன் நினைத்திருந்த செயலைக் கரப்பவும், அன்றிரவு கழிந்த பின்னர், முன்னாள் பசுவின் கன்றின்மேல் தனது தேரைச் செலுத்தினவனை, அவன் தந்தையும் அவன் மேல் தனது தேரைச் செலுத்தினான் (ஆகையால்), செங்கோன்மைக்கு முதுமையுடையோனுக்கு ஒரு நீதி இளமையுடையானுக்கு ஒரு நீதி என்பதில்லை. "முறைமைக்கு மூப்பின்மை இல்' என்பது பழமொழி.