ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே
ஏகல் மலைநாட! என்செய்தாங் கென்பெறினும்
ஆகாதார்க்கு ஆகுவது இல். (பாடல்-127)
மலை நாடனே! செல்வம் ஆக்கும் ஆகூழ் வந்தெய்துங் காலம் நெருங்கியவர்களுக்கு செய்வதொரு முயற்சியும் வேண்டுவதில்லை. செல்வம் போக்கும் போகூழ் வந்தெய்துங்காலம் நெருங்கியவர்களுக்கு, அவர்கள் நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியும் பயனில்லை. எத்தகைய முயற்சியைச் செய்து, எத்தகைய துணையைப் பெற்றாராயினும் செல்வம் ஆக்கும் ஆகூழ் நெருங்காதவர்க்கு ஆவதொன்றில்லை. "ஆகாதார்க்கு ஆகுவது இல்' என்பது பழமொழி.