பழமொழி நானூறு
கோவாத சொல்லும் குணனிலா மாக்களை
நாவாய் அடக்கல் அரிதாகும் - நாவாய்
களிகள்போல் தூங்கும் கடற்சேர்ப்ப! வாங்கி
வளிதோட்கு இடுவாரோ இல். (பா-79)
மரக்கலங்கள் கள்ளுண்டு ஆடும் களியர்போல ஆடுகின்ற கடல் நாடனே!, காற்றினை ஒரு கொள்கலத்துள் வாங்கி தோள்களுக்கு இடவல்லார் உளரோ? இல்லை. (அதுபோல), பொருத்தமில்லாதவைகளைக் கூறும் நற்குணங்கள் ஒரு சிறிதும் இல்லாத விலங்கொப்பாரை நாவினிடத்து அடக்குதல் இல்லையாம். (க-து.) கீழ்மக்களின் நாவினை அடக்குதல் முடியாது. "வாங்கி வளிதோட்கு இடுவாரோ இல்' என்பது பழமொழி.