உள்ளூ ரவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் - தள்ளா
தழுங்கல் முதுபதி அங்காடி மேயும்
பழங்கன்றே றாதலும் உண்டு. (பாடல்-108)
விளங்குகின்ற இழையினை உடையாய்! ஒலியினையுடைய பழைய நகரில், கடைத்தெருவின்கண் நடக்க முடியாது நடந்து மேய்கின்ற பழைய கன்று வலிய எருதாதலும் உண்டு. (ஆதலால்), ஒருவனுக்கு முதலாக இருக்கின்ற பொருளது சிறுமையை, அவனது ஊரின்கண் வாழ்பவரால் ஐயமின்றி அறிந்தோமாயினும் அவனைப் பொருளிலான் என்று இகழா தொழிதல் வேண்டும். (க-து.) பொருள் சிறிதுடையார் என்று யாரையும் இகழற்க. "பழங்கன்றே றாதலும் உண்டு' என்பது பழமொழி.