ஒரு சமயம் திருமலைராயன் அரசவையில் இருந்த அதிமதுரக் கவிராயர் அங்கே வந்த காளமேகப் புலவரை அவமதிக்க எண்ணிப் பற்பல கேள்விகளைக் கேட்டார். ஒன்று முதல் பதினெட்டு வரை ஒரு வெண்பாவில் அடக்கிக்காட்ட முடியுமா? என்று வினாத் தொடுத்தார்.
அதற்குக் காளமேகம் அலட்சியமாக "ஒன்று முதல் பதினெட்டு வரை முறையாகக் கூறினால் அதுவே வெண்பா ஆகிவிடுமே!'' என்று கூறிச் சிரித்தார். பிறகு மாச்சீர், காய்ச்சீர் அலகிட்டு காளமேகம் பின்வரும் வெண்பாவைப் பாடிக் காட்டி,
"ஒன்றிரண்டு மூன்றுநான்
கைந்தாறே ஏழ்எட்டாம்
ஒன்பது பத்துப்
பதினொன்று பன்னி
ரண்டுபதின் மூன்றுபதி
னான்குபதி னைந்துபதி
னாறுபதி னேழ்பதி னெட்டு'
என்று அசத்தினார். ஆனால், அவருடைய அரிய புலமையை நேரில் கண்ட பிறகும் அரசரும் அதிமதுரக்கவியும் தக்க மரியாதை செய்யாமல் அவமதிக்கவே, காளமேகம் மனம் நொந்து திருமலைராயன் பட்டணத்தை மண் மாரிப் பொழிந்து அழியும்படி வசை பாடினார் என்பது வரலாறு.
- எதிரொலி எஸ். விசுவநாதன்