பகை மன்னரிடம் உறவு
செருக்கு உடைய மன்னர் இடைப்புக்கு அவருள்
ஒருத்தற்கு உதவாத சொல்லின் தனக்குத்
திருத்தலு மாகாது தீதாம்; அதுவே
எருத்திடை வைக்கோல் தினல் (பா.187)
போர்ச் செருக்குடைய மன்னர்கள் இருவரிடையே ஒருவன் புகுந்து அவருள் ஒருவருக்கு உதவாத செய்தியைச் சொன்னான் என்றால், அதனைக் கேட்டு அவர்கள் சீறி எழுவர்.
அதனைத் திருத்துவதற்குத் தனக்கும் முடியாமல் போக, அது முடிவில் சொன்னவனுக்கே தீமையாய் முடியும். இரண்டு எருதுகளின் நடுவே இட்டிருக்கும் வைக்கோலைத் தின்னப்புகும் மோழை மாடு, அவை இரண்டாலும் குத்தப்பட்டுத் துன்பம் அடைவதன்றி வைக்கோலைத் தின்ன முடியாதது போலவே, அவன் கதியும் பயனற்றுத் துன்பமாக முடியும். "எருத்திடை வைக்கோல் தினல்' என்பது பழமொழி.