தனி மனிதர் ஒருவர் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ முடியும் என்பதை நிறுவிக் காட்டிய பெருந் தமிழறிஞர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தவர். இவ்வாதீனத்தின் 16-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர்.
ஆதீனத்தில் பிள்ளையவர்கள் உறைந்த காலத்தில், தேசிகரிடம் தமக்கு வேண்டிய உடையைத் தருமாறு பாடலாக எழுதி விடுத்தார். புத்தாடையைக் "கோடி' என்பது வழக்கம். ஓர் ஆடை எனினும் அது கோடியுடை அல்லவா! அதனால், ஒன்றைத் தந்தாலே கோடியென்று மகிழ்ச்சி கொள்வேன்; எனக்குக் கோடி தந்தால் எவ்வாறு மகிழ்வேனோ? என்று தம் கவித்திறனும் நன்றியுணர்வும் ஒருங்கே அமையப் பாடினார் மகாவித்வான்.
"ஒன்றளித்தால் கோடியென உன்னுவேற்குக் கோடி
இன்றளித்தால் என்னவென எண்ணுவேனே-நன்றுணர்வாய்
வண்ணமா டத்துறைசை வாடிநசுப் பிரமணிய
அண்ணலே! இன்னே அருள்'
மகாவித்துவானின் கவிநயம் படிக்கப் படித்தத் திகட்டாத தேனமுது.
-புலவர் தி.வே. விஜயலட்சுமி