பழமொழி நானூறு
விடலமை செய்து வெருண்டகன்று நில்லாது
உடலரும் மன்னர் உவப்ப வொழுகின்
மடலணி பெண்ணை மலிதிரைச் சேர்ப்ப!
கடல்படா எல்லாம் படும். (பாடல்-225)
மடல்கள் நிரம்பிய பனைமரங்கள் மிகுதியாக விளங்கும் கடற்கரைக்கு உரியவனே! மன்னரைச் சேர்ந்து வாழ்ந்து வருகிறவர்கள், அம்மன்னர் தம்மை விலக்கிவிடுதற்குரிய செயல்களைச் செய்து, அதனால் அவர்கள் தம்மை என்ன செய்வார்களோ என்று பயந்துகொண்டே வாழாமல், அரியதான உடலினைப் பெற்ற அம்மன்னர்கள் மகிழ்வடையத் தக்கவாறே நடக்க வேண்டும். அப்படி அவர்கள் நடந்து கொண்டார்கள் என்றால், கடலினும் கிடையாத அளவு பெருஞ் செல்வவளம் எல்லாம் அவர்களுக்கு வந்து வாய்க்கும். "கடல்படா எல்லாம் படும்' என்பது பழமொழி.