
ஆலயம் தோறும் சென்று உழவாரப் பணி மேற்கொண்டு மகேசன் சேவையை தன்வாழ்க்கை லட்சியமாகக் கருதி வந்தார் திருநாவுக்கரசர். அந்த அப்பர் பெருமானுக்கு திருப்பைஞ்ஞீலி திருத்தல இறைவனை தரிசிக்க ஆசை. ஒருநாள் புறப்பட்டார் திருப்பைஞ்ஞீலி நோக்கி. நல்ல வெயில் நேரம். தாகத்தால் தவித்தார் அப்பர் பிரான். பசி மயக்கம் வேறு. களைத்துப் போன அவர், உணவுக்காகத் தவித்து சுற்றுமுற்றும் தேடினார். ஒருவரையும் காணவில்லை. சிவ நாமத்தை உச்சரித்து திருப்பைஞ்ஞீலி நாதனை தியானித்தபடியே முன்னே சென்றார் அப்பர்பிரான். அப்போது, ஒரு முதிய அந்தணர் அவர் முன்னே வந்தார். கையிலே கட்டுச்சோறு. தாகம் தீர்க்க அருகே சிறிய குளம். நிழலில் அமர சிறு மண்டபம் எல்லாமே இருக்கக் கண்டு, திருப்பைஞ்ஞீலிநாதரை மனதில் போற்றியபடியே அந்தணர் தந்த உணவை உண்டார். அவரிடம் திருப்பைஞ்ஞீலிக்கு வழி கேட்டார். உடன் வருவதாய்ச் சொன்ன அந்தணர், தலத்துக்கு அருகே வந்ததும் மறைந்திட, வந்தவர் இறைவனே எனக் கண்டார் அப்பர். ஆனந்தக் கண்ணீர் உகுத்தார். அங்கே லிங்க வடிவில் பெருமான் தெய்வீகக் காட்சி தர, அப்பரின் வேண்டுகோளின்படி சோற்றுடைய ஈஸ்வரராக கோவிலின் முன்புறம் தனிச்சந்நிதியில் எழுந்தருளினார் சிவபெருமான். இன்றும் சித்திரை மாத அவிட்டத்தில் இந்தச் சந்நிதியில் சோறு படைத்த விழா கோலாகலமாக நடக்கிறது.
தேவார மூவரால் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலமான இந்தத் தலத்தில் பல்வேறு சிறப்புகள் உள்ளன.
பெயர்க் காரணம்:
திருச்சிக்கு அருகே உள்ளது திருப்பைஞ்ஞீலி. "ஞீலி' என்பது ஒரு வகை கல் வாழை. பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாகப் பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. "ஞீலி' என்ற இந்த வாழை வேறு இடத்தில் பயிராவதில்லை. இதன் இலை, காய், கனி அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணிக்கப்படுகிறதாம். இவற்றை மனிதர்கள் உண்டால் நோய் வருமாம். இதன் கனியை சுவாமிக்கே நிவேதனம் செய்து தண்ணீரில் விட்டுவிடுகிறார்கள்.
சோற்றுடைய ஈஸ்வரர்!
திருச்சி - மண்ணச்சநல்லூர் வழியே திருப்பைஞ்ஞீலி தலத்துக்குச் செல்கிறோம். கிழக்கு நோக்கிய பெரிய கோயில். ஊருக்கு மத்தியில் நிலமட்டத்துக்கும் சற்று கீழே அமைந்துள்ள தலம். ஞீலிவனேஸ்வரர் ஆலயம் முற்றுப்பெறாத மொட்டை கோபுரத்துடன் திகழ்கிறது. இந்த முதல் கோபுரத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு நான்கு கால் மண்டபம், அதன் பின்புறம் 3 நிலைகளை உடைய ராவணன் வாயில் என்று கூறப்படும் இரண்டாவது நுழைவு கோபுரம் ஆகியவற்றைக் காண்கிறோம். ராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் முன் இடதுபுறத்தில்தான் சோற்றுடைய ஈஸ்வரர் சந்நிதி உள்ளது.
இந்த இரண்டாவது கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் சந்நிதியை அடைகிறோம். இந்த மூர்த்தி சுயம்பு லிங்கம். எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலைச் செய்துவர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லபர் எனப்படுகிறார். மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு, அக்னி, அர்ஜுனன், வசிஷ்டர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். மூலவர் சந்நிதியில் ரத்தின சபை இருக்கிறது. வசிஷ்டரின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் நடன தரிசனம் தந்தருளிய ரத்தின சபை இது என்பதால், இத்தலத்துக்கு "மேலச் சிதம்பரம்' என்றும் ஒரு பெயர்.
ஞீலிவனம், கதலிவனம், அரம்பைவனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்ரபுரி, மேலைச் சிதம்பரம் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் தலம். வசிஷ்ட முனிவருக்கு இறைவன் நடனக் காட்சியருளிய தலம். நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை. சுவாமி சந்நிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்கள் ஆக எண்ணி வணங்குகின்றனர். ஆலய பிராகாரத்தில் விநாயகர், முருகர், நடராஜர், எமன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் விசாலாட்சி எனும் பெயரிலேயே அம்மனுக்கு இரண்டு சந்நிதிகள் உள்ளன.
இழந்த பதவி கிடைக்கும்!
இரண்டாவது கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் செல்லாமல் வெளிச் சுற்றுப் பிராகாரமாக வலம் வரும்போது, எமன் சந்நிதியை தரிசிக்கிறோம். சந்நிதி ஒரு குடைவரைக் கோவிலாக அமைந்துள்ளது. பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமாஸ்கந்த தரிசனம். சிவன், அம்பிகையுடன் முருகன் அமர்ந்திருக்க, சிவபெருமானின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். இந்தச் சந்நிதியின் முன், திருக்கடவூரில் நிறைவேற்றிக்கொள்வது போல சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் போன்றவற்றை நடத்துகிறார்கள். இந்தச் சந்நிதிக்கும் ஒரு கதை சொல்கிறார்கள்... திருக்கடவூரில் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை காலால் உதைத்து அழித்தார். இதனால் உலகில் இறப்பு எனும் நிகழ்வு நடக்காமல் போனது. பூமியின் இயல்பு நிலை கெட்டது. அதர்மம் ஓங்கியது. இதனை பூமிதேவியும் தேவர்களும் சிவபெருமானிடம் முறையிட, அவர்களின் கோரிக்கைக்கு இணங்கி சிவபெருமான் எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் மீண்டு எழும்படி செய்தார். தர்மம் தவறாமல் நடக்க அறிவுரை கூறி, எமனின் பணியை மீண்டும் செய்து வர அருள் புரிந்தார். எனவே இந்தத் தலத்தில் எமனின் சந்நிதியில் குடிகொண்ட சோமாஸ்கந்த மூர்த்தியை வணங்கி வருபவருக்கு இழந்த பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வாழை மர வழிபாடு!
அன்னை பார்வதி ஒருமுறை, சிவ தியானத்தில் இருக்க இத்தலம் வந்தார். தவம் செய்ய, நிழல் தரும் மரங்கள் இல்லாத நிலையில், அவருக்கு பணிவிடை செய்ய ஏழு கன்னிமார்களும் வாழை மரங்களாக அருகில் தோன்றி நிழல் தந்தனர். அவர்களுக்கு அருள் புரிந்த அன்னை பார்வதி, சப்த கன்னியரும் வாழை மர வடிவிலேயே அந்த வனத்திலிருந்து தன் தரிசனம் கண்டு, வருவோர்க்கு அருள வரம் தந்தார். அருகே சிவபெருமானும் சுயம்புவாக எழுந்தருளினார்.
இங்கே வாழைக்கு பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும் என்பது பலரின் அனுபவம். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது சிறப்பு. இந்தப் பரிகார பூஜை காலை 8.30 - 12.30 மணி வரையிலும், மாலை 4.30 -5.30 வரையிலும் நடத்தப்படுகிறது.
இருப்பிடம்: திருச்சிக்கு அருகே சுமார் 12 கி.மீ. தொலைவு. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்ஞீலி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.
தகவலுக்கு: 0431}2902654
- மனத்துக்கினியான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.