

தெய்வங்களின் திருவருளைப் பெரிதும் பெறுவதற்கு அருந்துணை புரிவன விரதங்கள் ஆகும். முறையாக விரதங்களை மேற்கொண்டு ஒழுகினால் நிறைவான வாழ்வு பெறலாம். இவைகளை திதி, வார, நக்ஷத்திர விரதங்கள் என்பர்.
ஆறுமுகத்தண்ணல்
சஷ்டி திதியில் வருவது சஷ்டி விரதம்! வாரத்தில் வருவது சுக்கிர விரதம். நக்ஷத்திரத்தில் அமைவதுதான் கிருத்திகை விரதம். கார்த்திகை நக்ஷத்திரம், கந்தப் பெருமானுடன் முழுதும் தொடர்புடையது. முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாகக் காட்சி அளித்தார். கார்த்திகை மாதர்கள் ஆறு பேர்களும் தனித்தனியாக ஒவ்வொரு குழந்தையையும் எடுத்துப் பால் கொடுத்து மகிழ்ந்தனர். இந்த இனிய நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகள்,
""அறு முக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின்
வெறி கமழ் கமலப் போதில் வீற்றிருந்தருளினானே''
-கந்தபுராணம்.
""ஞாலமேத்தி வழிபடும் ஆறு பேர்க்கு மகாவன
நாணல் பூத்த படுகையில் வருவோனே''
- திருப்புகழ்.
என்றெல்லாம் முருகப் பெருமான் புகழ் பரவும் புனித நூல்களில் பேசப்படுகின்றன.
"சேந்தன் திவாகரம்' என்ற பழந்தமிழ் "நிகண்டு' நூலிலும் முருகனது பெயர்ச் சிறப்புகளில் "அறு மீன் காதலன்' (கார்த்திகை மைந்தன்) என்ற திருப் பெயர் காணப்படுகிறது.
கார்த்திகை மாதர்கள்
சரவணப் பொய்கையில் விளையாடும் அறுமுகக் குழந்தையைக் காண உமாதேவியும் சிவபெருமானும் வந்தனர். அவர்கள் இருவரையும் கார்த்திகை மாதர்கள் தரிசித்து வணங்கி அடி பணிந்து நின்றனர்.
பாலூட்டி வளர்த்த கார்த்திகை மாதர்களைக் கண்டு மகிழ்ந்த பரமசிவனார், ""உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள்'' என வினவ, "அம்மை அப்பர் தரிசனமே தங்கள் பாக்கியம்' என்று நினைத்து அவர்கள் ஏதும் கேட்காமல் அமைதியாக இருந்தனர். சிவபெருமான் அவர்கள் மீது திரு நோக்கம் செய்து ""கார்த்திகைப் பெண்மணிகளே! நீங்கள் முருகனை கனிவுடன் எடுத்து வளர்த்தமையால், இவன் "உங்கள் மகன்' என்ற பொருளில் "கார்த்திகேயன்' என்றும் பெயர் பெறுவான். உங்கள் தினமாகிய கார்த்திகை விண்மீன் நன்னாளில் விரதமிருந்து கந்தன் திருவடிகளை வழிபடுவோர் இகபர நலன்களைப் பெறுவர்'' என்று அருளினார்.
""கந்தனை நீர் போற்றிய கடனால் இவன் உங்கள் மைந்தன் எனும் பெயர் ஆகுக; மகிழ்வால் எவரேனும் நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர் தந்தம் குறை முடித்தே பரந்தனை நல்குவம் என்றான்'' என்று கந்த புராணத்தில் வருகிறது.
பெற்ற தாயைப் போலவே வளர்த்த தாயும் மரியாதைக்குரியவளே! "அன்பு' என்னும் தாய், "அருள்' என்னும் குழந்தையைப் பெறுகிறது. அந்தக் குழந்தையைப் "பொருள்' என்னும் வளர்ப்புத் தாய் எடுத்து நாளொரு மேனியும், பொழுதொரு ஒரு வண்ணமுமாக வளர்க்கின்றாள். எனவே "பொருள்' என்னும் வளர்ப்புத் தாயை "செல்வத்தாய்' எனப் போற்றினார் திருவள்ளுவர்.
""அருள் என்னும் அன்பு ஈன் குழலி பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு'' - திருக்குறள். வள்ளுவர் பெருமான், வளர்ப்புத் தாய்க்கு "செல்வ' என்று அடைமொழி கொடுத்து ஓதி, வளர்ப்பு அன்னை பெருமையைத் தெள்ளிதின் விளக்கினார். இத்தனைப் பேருண்மைகளுக்கும் எடுத்துக் காட்டாகவே கிருத்திகை விரதம் விளங்குகிறது.
கிருத்திகை விரதம் மூன்று நாட்கள் தொடர்புடையது. கிருத்திகைக்கு முதல் நாள் பரணி நட்சத்திரத்தின் பின்னேரத்தில் சிறிது உண்டு, கார்த்திகை அன்று மை கறை படிந்த இருள் மெல்ல மெல்ல அகலும் வைகறைப் போதில் நீராடி, உலர்ந்த ஆடை உடுத்தி, தெய்வக் குழந்தை கந்தனை சிந்தனை செய்து மகிழ வேண்டும்; கந்த புராணம் உள்ளிட்ட முருகன் துதி நூல்களை ஓத வேண்டும்; அன்று முழுதும் உண்ணவும் கூடாது! உறங்கவும் கூடாது!
அடுத்த நாள் அதிகாலை "உரோகிணி' நட்சத்திரத்தில் எழுந்து இனிய புனலாடி, மனமார வள்ளி மணவாளனை நினைந்து, பின் ""பாரணை'' செய்ய வேண்டும் (பாரணை = சக்தியைக் கொடுக்கும் உணவு). கிருத்திகை விரத சம்பிரதாயம் இவ்வண்ணமாகத்தான் அமைந்துள்ளது.
ஆனால் தற்போது விரைந்து செல்லும் காலநடையில், கிருத்திகை ஒரு நாள் மட்டுமே இவ்விரதம் பின்பற்றப்படுகிறது.
தை கிருத்திகை மகிமைகள்:
"உத்தராயண புண்ய காலம்' என்று போற்றப் பெறும் மாதத் தொடக்கம் தை மாதம் ஆகும். அம்மாதத்தில், அமாவாசைக்கு அடுத்த ஏழாம் நாளன்று, அருணன் என்பவன் சாரதியாக இருந்து ஓட்டும் கதிரவன் தேர், வடக்கு முகமாகத் திரும்புகிறது. அந்நன்னாளே "ரத சப்தமி' எனப்படுகிறது. இந்தப் புண்ணிய தினத்துக்கு அடுத்து வரும் நாளே "தை கிருத்திகை' ஆகும்.
சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக மலர்வது "தை' மாதம்.
பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் மால் மருகன் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும்; கட்டாயம் குழந்தையும் பிறக்கும். எனவே தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்' எனும் வாழ்வியல் பழமொழி வருகிறது. இந்தப் பழமொழி, பொங்கலோடும் தொடர்புடையது!
தலங்கள் தோறும் தை கிருத்திகை
மாதம் தோறும் கிருத்திகை விரதங்கள் வருகின்றன. ஒரு சில மாதங்கள் இரண்டு கிருத்திகைகள் வருவதுண்டு. இதனை "உபரி கிருத்திகை' என்பார்கள். கிருத்திகைகளில் ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை நாள்கள் காட்சியும் மாட்சியுமுடையனவாகும்.
ஆறுமுகனின் ஆறு படை வீடுகளிலும், ஏனைய தலங்களிலும், மற்றும் சைவ சமயம் சார்ந்த சபைகளிலும் தை கிருத்திகை, தனி மகத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது.
"அபிஷேகத்துக்குப் பழநி! அலங்காரத்துக்குச் செந்தூர்' என்பார்கள். திருச்செந்தூரில் தை கிருத்திகை விழாவில் காலையிலும், மாலையிலும் முறையே சண்முக நாதர் சிங்கக் கேடய சப்பரத்திலும், பூங்கோயில் சப்பரத்திலும் திருவீதி பவனி வருவார். மாலை மதி நிலவில், சாலவும் அழகுடன் கடற்கரை ஓரமாக உலா வரும் அவரை ""அழகான செம்பொன் மயில் மேலமர்ந்து அலைவாயுகந்த பெருமாளே'' என்று அருணை வள்ளல் திருப்புகழில் துதி செய்தருளினார்.
தை மாதம் திருவண்ணாமலையில் "ஊடல் உற்சவம்' நிகழும். அப்போது தை கிருத்திகை நாளில், திருவண்ணாமலை குமரன் கோயிலுக்கு அருணாசலேசுவரர் எழுந்தருளும் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். திருவண்ணாமலை குமரன் கோயில், அந்நகர் வடக்கு வீதியில் உள்ளது.
""ஜோதி முருகா! நித்தா! பழைய ஞான
சோணகிரி வீதி கந்தவேளே''
""அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே'' என்றெல்லாம் திருப்புகழ் பாடல்கள், இந்தக் குமரன் புகழ் கூறுகின்றன. திருவண்ணாமலை குமரன் கோயிலில், தை கிருத்திகை அன்று அபிஷேக ஆராதனைகள் பெருமளவில் நிகழ்கின்றன. ஆறுமுகன் அடியார்கள் திருக்கூட்டம், அன்று அலைகள்போலத் தொடர்கின்றன.
காஞ்சிபுரம் ஒரு "சோமாஸ்கந்த' தலமுமாகும். காமாட்சி- ஏகாம்பரநாதர் கோயில்களுக்கிடையே "குமரக் கோட்டம்' எனும் தனிக்கோயிலில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். அங்கு பாம்பன் சுவாமிகளுக்கு முருகன் கருணை புரிந்த "மயூரநாதர்' முன்பு அன்று "பஞ்சாமிருத வண்ணம்' (ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய வண்ணங்கள்) பாராயணம் செய்யப் பெறும். பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் என ஐந்து அருமையான திருமஞ்சனங்களும் நடைபெறுகின்றன. அன்றைய தினம் பக்தகோடிகளுக்கு அன்னதானம் செய்யப்படுகின்றது.
"செந்தலை' என்ற ஊரில், ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திகழும் சோமாஸ்கந்தர் திருமுகத்தில், தை கிருத்திகை நன்னாளில் சந்திர ரேகை தெரியும் சுந்தரக் காட்சி விழா அற்புதமாக நடைபெறுகிறது. அளவிலா அடியார்கள் அக்காட்சி கண்டு களிநடனம் புரிகின்றனர்.
ஆரவாரம் அலைமோதும் தற்கால வாழ்வில், அடிக்கடி முருகக் கடவுளை தரிசிக்க இயலாவிடினும், ஆண்டுக்கொரு முறை, தூண்டு சுடராகப் பொலியும் தை கிருத்திகை நன்னாளிலாவது முருகன் திருநாமங்களை இயன்ற அளவில் மொழிந்து, அவன் எழுந்தருளியுள்ள ஆலயங்கள் - சபைகள் சென்று, அவனை அகம் உருகி வழிபட்டு அருளும் பொருளும் பெறுவோமாக! கடவுளைத் தேடாத வாழ்வு பயனற்றது அல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.