
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரை ஓரமாக உள்ளது விசாக நட்சத்திரக் கோயில். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயிலில் காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட காசிலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அருகே புஷ்பகேசி அம்மன் அருள்புரிகிறார். கோயிலின் வெளிப்பிராகாரத்தில் பிரளய நாயகியம்மன் கோயிலும் கட்டப்பட்டுள்ளது.
தேய்பிறை அஷ்டமியன்று இங்குள்ள பைரவருக்கு மிளகு வைத்து தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இக்கோயிலில் உள்ள காசிலிங்கத்தை வழிபட்டால், காசி, ராமேஸ்வரம் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரதோஷ தினத்தன்று மாலை 4.30 மணிக்கு, சனீஸ்வர பகவான் சந்நிதியின் பின்புறம் உள்ள வன்னிமரம் அடியில் உள்ள சனீஸ்வர லிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்தால் நவகிரக தோஷம் விலகும் என்கிறார்கள் பக்தர்கள்.
இக்கோயில் விசாக நட்சத்திர தலம் என்பதால் மாதந்தோறும் விசாக நட்சத்திரத்தன்று மாலை 5 மணிக்கு பிரளயநாதர் மற்றும் சனீஸ்வர லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பிரளயநாதர் சந்நிதியில் சுவாதி, சித்திரை, விசாகம், உத்திரம், கேட்டை, புனர்பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களைக் கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. இவைதவிர பல்வேறு விசேஷங்களும் நடக்கின்றன.
மதுரை பெரியார் நிலையத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ளது. பேருந்து வசதி உண்டு. மேலும் விவரங்களுக்கு 9942840069, 9360797449.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.