ஸ்ரீராஜமாதங்கி!

""ஆதி பரம்பொருளின் ஊக்கம் - அதை  அன்னை எனப் பணிதல் ஆக்கம்  மூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த  மூன்று புவியும் அதன் ஆட்டம்  ஆதி சிவனுடைய சக்தி - எங்கள்  அன்னை அருள் பெறுதல் முக்தி  வைய முழுதும் படைத்தள
ஸ்ரீராஜமாதங்கி!
Updated on
1 min read

""ஆதி பரம்பொருளின் ஊக்கம் - அதை

 அன்னை எனப் பணிதல் ஆக்கம்

 மூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த

 மூன்று புவியும் அதன் ஆட்டம்

 ஆதி சிவனுடைய சக்தி - எங்கள்

 அன்னை அருள் பெறுதல் முக்தி

 வைய முழுதும் படைத்தளிக் கின்ற

 மகாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்''

 என்று மகாசக்தியை மகாகவி பாரதி சிறப்பித்துப் பாடியுள்ளார். மகா கணபதிக்கு அடுத்து பூஜிக்க வேண்டிய தெய்வம் ஸ்ரீராஜமாதங்கி என்று சாக்த நூல்கள் கூறுகின்றன. மதங்க ரிஷிக்குப் பிறந்த புதல்வியே ராஜமாதங்கி. திருவெண்காடு (சுவேதாரண்யம்) என்ற திருத்தலத்தில் உள்ள மதங்க தீர்த்தத்தில் ஆடிமாதம் வெள்ளிக்கிழமை அன்று, மதங்க ரிஷி இவளைக் குழந்தையாகக் கண்டெடுத்தாராம். இவளுக்கு ஏழு வயதானபோது திருமணம் செய்து வைக்க விருப்பம் கொண்டு, மதங்கேஸ்வரரை தியானிக்க, ஈஸ்வரரும் சித்திரை மாத

 சுக்லபட்ச சப்தமியில் திருமணம் செய்து கொண்டதாக திருவெண்காட்டுத் தல

 வரலாறு கூறுகிறது.

 இந்த ராஜமாதங்கி, அன்னை ஸ்ரீராஜராஜேஸ்வரியின் மந்திரியாக இருப்பவள். அன்னை லலிதாம்பிகையின் கையில் இருக்கும் கரும்பு வில்லில் இருந்து தோன்றிய மந்த்ரிணி என்றும் சொல்லப்படுகிறது. மதுரை மீனாட்சியே மந்த்ரிணி ரூபம் என்பதால், மீனாட்சியே மாதங்கி ஸ்வரூபம் என்பர். இவளுக்கு 16 திருப்பெயர்கள் உள்ளன. அவை: சங்கீதயோகினி, சியாமா, சியாமளா, மந்த்ரிநாயிகா, மந்த்ரிணி, சசிவேகாணி, பிரதானேசீ, சுகப்பிரியா, வீணாவதி, வைணிகீ, முத்ரிணி, பிரியகப்பிரியா, நீபப்பிரியா, ககம்பேசி, கதம்பவனவாசினி, ஸ்தாமதா. மேலும் 6 அங்க தேவதைகளும் உள்ளன. அத்தேவதைகள் பல கலைகளுக்கு அதிபதி என்பதால் ராஜமாதங்கியை உபாசித்தால் கலைகள் யாவும் வழங்குவாள்.

 இவள் பத்மாசனத்தில் அமர்ந்து கையில் வீணை இசைத்தபடி இருப்பாள்.

 ராஜமாதங்கி அனைத்து மந்திர, யந்திர, தந்திரங்களிலும் இருப்பவள். வித்யைகளுக்குக் காரணமானவள்; சண்டன், முண்டன், விசும்பன் வதத்துக்குக் காரணமானவள். அன்னைக்கு இந்தப் போரின்போது மந்திரியாக இருந்து செயல்பட்டவள்.

 அன்னைக்கு சண்ட, முண்டன் வதத்தின்போது உதவிய சக்திகள் 13 எனக் கூறப்படும். அவை: மகாகாளி, மகாலட்சுமி, சாங்கரி, ஜெயதுர்க்கா, மகாசரஸ்வதி, பத்மாவதி,

 ராஜமாதங்கி, பவானி, அரித்தாம்பிகை, செüபாக்கிய காமேஸ்வரி, புவனேஸ்வரி, சூலினி துர்க்கா, சிவதாரிகா பரமேஸ்வரி. இந்த 13 சக்திகளுள் ராஜமாதங்கி குறிப்பிடத் தக்கவள்.

 அபிராமி பட்டரின்,

 ""கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்

 பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்

 மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மாதங்கர்குலப்

 பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டித் தன் பேரழகே''

 என்ற அபிராமி அந்தாதி பாடலைப் பாடி ராஜமாதங்கியின்

 அருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com