விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பலன்தரும் பரிகாரத் தலம்: பயம் தொலைக்கும் பரமன் ஆலயம்

ஆரண்யநதி, குசஸ்தலை ஆறுகளின் நடுவில் ஒரு சோலை. இங்கே குடில்களை அமைத்து தவ வேள்வி இயற்றினர் முனிவர்கள். அவர்களில் ஒருவர் சுச்வாஸ முனிவர். ஒருநாள்... ஆரண்ய நதியில் நீராடி குடிலுக்குத் திரும்பியவருக்கு அத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:26 am

மயில் வாகனன்

ஆரண்யநதி, குசஸ்தலை ஆறுகளின் நடுவில் ஒரு சோலை. இங்கே குடில்களை அமைத்து தவ வேள்வி இயற்றினர் முனிவர்கள். அவர்களில் ஒருவர் சுச்வாஸ முனிவர்.

ஒருநாள்... ஆரண்ய நதியில் நீராடி குடிலுக்குத் திரும்பியவருக்கு அதிர்ச்சி. வேள்விச் சாலை எங்கும் ரத்த மாமிசங்கள். சுச்வாஸர், தனது ஞானக்கண்ணால் இது சிரவணாசுரனின் வேலை எனக் கண்டார். மீண்டும் தவச்சாலை ஏற்படுத்தி அக்னிஷ்டோம யாகம் தொடங்கினார். அப்போது, பலத்த காற்றுடன் மண்மாரி பெய்தது... பெருத்த உடலுடன் தீச்சுடர் கக்க சிரவணாசுரன் வந்தான். இளம் முனிவர்கள் அலறினர். அப்போது, குசநாபர் என்ற ரிஷி கோபக்கனல் கக்கும் கண்களுடன் அவன் முன் நின்றார். சிரவணாசுரன் பயந்து பின்வாங்கினான்.

நாட்கள் சென்றன. ஒருநாள்... சுச்வாஸர் பிருந்தாரண்யத்தில் இருந்த கண்வ ரிஷியிடம் சிரவணாசுரனைப் பற்றிச் சொல்ல, கண்வர் தான் நைமிசாரண்யத்தில் காச்யப முனிவரிடம் பெற்ற உபதேசத்தை அவருக்கு உபதேசித்தார். ஸ்ரீமந் நாராயணனை விக்ரக ரூபத்தில் வழிபடச் சொன்னார்.

ஆஸ்ரமத்தில் யாகம் செய்தார்கள். குசநாபர் முன் விஸ்வகர்மா தோன்றி ஒரு சிலையை வடித்துக் கொடுக்க முனைந்தார். அப்போது பூமிப் பிராட்டி சகிதராக, சங்கு-சக்ர அபய கரங்களுடன் ஸ்ரீதேவாதிராஜ பெருமாள் காட்சி அளித்தார். அங்கே வரதராஜருக்கு சந்நிதி எழுந்தது. விஸ்வகர்மாவின் கைவண்ணத்தில் ஆஸ்ரமம் ஆலயமானது. மீண்டும் அங்கே யாகங்கள் தொடர்ந்தன. இதை அறிந்த சிரவணாசுரன், அசுரர்களுடன் தாக்க வந்தான். முனிவர்கள், பெருமாளிடம் சரணாகதி அடைந்தனர். அடுத்த நொடி, சுதர்ஸனச் சக்கரத்தில் இருந்து கிளம்பிய

ஜுவாலை, சிரவணாசுரன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்து மீண்டது. முனிவர்கள் பெருமாளை போற்றிக் கொண்டாடி, யாகங்களைத் தொடர்ந்தனர்.

வால்மீகி முனிவர் ஒருமுறை லவ-குசனுடன் யாத்திரை செய்தார். ஒரு சித்ரா பெüர்ணமியன்று, இங்கே அவர்கள் பர்ணசாலை அமைத்துத் தங்கினர். அன்று நித்தியக் கடன்களைச் செய்ய, லவனும் குசனும் நதியில் மூழ்கினர். நதியின் நடுவில், ஆதிசேஷன் குடைபிடிக்க சங்கு-சக்ரதாரியாகக் காட்சி தரும் தேவாதிராஜரை முனிவர் ஒருவர் பூஜிப்பதைக் கண்டு, ஆச்சரியம் அடைந்து வால்மீகியிடம் தெரிவித்தனர். அவர் ஞானக்கண்ணால், அருகில் ஸ்ரீவரதராஜப் பெருமாளை வணங்கி வரும் குசநாப முனிவரைக் கண்டார். பின்னர், குசநாபர் ஆஸ்ரமத்துக்கு மூவரும் சென்றனர். அங்கே பெருமாளைக் கண்டு, ஸ்ரீராமாயண ஸ்லோகங்களால் போற்றினர்.

ஒருநாள், வால்மீகி முனிவரின் கனவில் தோன்றிய பகவான், லவ-குசருக்கு வில்வித்தை கற்றுத் தரும்படி கூற, அவர்களுக்கு அங்கேயே வில்வித்தை அளிக்கப்பட்டது. சிறுவரான லவனும் குசனும் அம்பு எடுத்து பயிற்சி செய்த இடம் ஆதலால், சிறுவர் அம்பு எடு எனப்பட்டது. பின்னாளில் சிறுவரம்பேடு, சின்னம்பேடு என மருவியது.

காட்டுக்கு மத்தியில் குடியிருப்புகள் தோன்றின. அடிக்கடி கலகம், திடீர் திடீரென குடியிருப்புகள் தீக்கிரையாவது, மிகப் பெரிய குளவிப் படை பறந்து வந்து மனிதர்களை தாக்குவது என ஒரே களேபரமாக இருந்தது. வாடிய மக்கள், முனிவரிடம் சரணடைந்தனர். அவரும் தேவராஜஸ்வாமியை தியானத்தார். தியானத்தில் ஒரு காட்சியைக் கண்டார். விஷ்ணுவின் மாயா சக்தியான வைஷ்ணவி தேவி, விந்திய மலையில் இருந்து இறங்கி பெருமாளின் சந்நிதி அடைந்தாள். பெருமாளின் வலது கண்ணில் இருந்து தோன்றிய ஒளி, வைஷ்ணவி தேவியின் இதயத்தில் புகுந்தது. அவள், வண்டுகளாகத் திரிந்து நாசம் ஏற்படுத்திய சிராவண அரக்கர்களைத் தன் காலால் பூமிக்குள் அழுத்திக் கொன்றாள்.

பின், வைஷ்ணவியாகக் கோலம் கொண்டு எழுந்தருளினாள். இதை யோகத்தில் கண்ட தபஸ்வி, அனைவரிடமும் விவரித்து, பயத்தைப் போக்கினார். இங்கே கோயில் பின்புறம், வரதராஜரைப் பார்த்து கோயில் கொண்டிருக்கிறாள் வைஷ்ணவி.

சென்னை-கொல்கத்தா சாலையில் சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில், இடப்பக்கமாக சிறிய சாலை பிரிகிறது. இதில், சுமார் 2 கி.மீ தொலைவு பயணித்தால் சின்னம்பேடு- ஸ்ரீஊரக வரதராஜ பெருமாள் திருக்கோயிலை அடையலாம்.

வாயிலுக்கு எதிரே உள்ள 16 கால் மண்டபம் வழியே வந்தால், ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதி. இங்கே ஸ்ரீசந்தான வேணுகோபாலர் ஒய்யாரமாகச் சாய்ந்தபடி, குழலூதும் கோலத்தில் காட்சி தருகிறார். வரதராஜஸ்வாமி, தேவியர் இருவருடன் காட்சி தருகிறார். மூலவர் சுதைத் திருமேனி. உற்ஸவர் திருமேனிகள் கொள்ளை அழகு.

இங்குள்ள குழலூதும் கண்ணனுக்கு தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் திருமஞ்சனம் செய்வித்து, திருமஞ்சனப் பாலை தம்பதியர் அருந்தி வர வேண்டும். குழந்தை பிறந்த பிறகு, வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்த வேண்டும் என்பது பலன் தரும் பரிகாரம்.

இங்கே குச-லவர்களுக்கு வால்மீகி முனிவர் சகல கலைகளையும் கற்றுத் தந்ததால், பெருமாளை வணங்கி, விளக்கு ஏற்றி பிரார்த்திக்க, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

இங்கே சுதர்ஸனர் மிக முக்கியமானவர். நல்லவர்களைக் காக்க நெருப்பாகப் புறப்பட்டு தீயவர்களை அழித்தவர் என்பதால், மனதினுள் தேவையற்ற பயம் இருப்பவர்கள், சுதர்ஸனப் பெருமாளை சனிக்கிழமைகளில் பூஜித்து வணங்க, துர்பயம் தொலையும். வரதராஜ பெருமாள் சந்நிதி விமானத்தில் குச-லவர்கள் அம்பெடுத்து நிற்க, சுதர்ஸனர் உக்கிர ரூபத்தில் காட்சிதர, குசநாப முனிவர் தொழுத கோலத்தில் இருக்கும் காட்சியை தரிசித்தாலே பயம் விலகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.