

அஞ்ஞானமாகிய இருளில் தட்டுத் தடுமாறி அறியாமையால் நரக வேதனையால் அழுது புலம்பிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு ஏது சந்தோஷம்? ஏது களியாட்டம்? அவர்கள் வாழ்க்கையின் நிலையாமை பற்றிச் சிந்திப்பதில்லை.
ஜனன மரண மூப்பு ஆயுளை அழித்துக் கொண்டிருப்பதை அறிவதில்லை. இந்த உடல் நோய்களின் கூடு. வாழ்வின் முடிவில் இவ்வழுக்கு மூட்டையாகிய உடல் உடைந்து சிதறுகிறது. சாவுதான் அதன் முடிவு. உடல் அழிந்த பின் பாப புண்ணிய வினைகள் அழியாமல் ஜீவனைத் தொடர்ந்து வருகின்றன.
சிவயோக நெறியைப் பின்பற்றி புலன்களையும் மனதையும் தன் வயப்படுத்தி ஆசையை வென்று அச்சத்தை ஒழித்து மாசற்ற நிலையில் இருப்பவன் எவனோ, அவனே உண்மையான சித்த வித்யார்த்தி. போலிச் சமயக் கொள்கைகளையும் எல்லாப் பற்றுதல்களையும் அறுத்தெறிந்து அச்சம் அற்றிருக்க வேண்டும். தேவைக்கு மேல் எதையும் ஏற்றுக் கொள்ளாமலும், வைத்துக் கொள்ளாமலும் இருப்பவனே துறவி.
எதிலும் நாட்டமில்லாமலும் இகத்திலும் பரத்திலும் ஆசையற்று ஞானத்தால் சந்தேகத்தை அறுத்து, சிவயோக சமாதிப் பழக்கத்தால் நித்தியப் பரம்பொருளில் ஆழ்ந்திருப்பவன் எவனோ, அவனே ஞானசித்தன். அவனே பரமஹம்சன். அவனே அவதூதன். சிங்கம் போல் வீரமுள்ளவனும் விசால நோக்கமுடையவனும், தீரனும், உண்மைக் கல்வியாகிய சித்த வித்தையைக் கற்றதன் மூலம் பாவ புண்ணியமற்ற பூரண நிலையை அடைந்தவனுமாக அத்தகைய ஞானசித்தன் விளங்குகிறான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.