நெல்லை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ளது களக்காடு. கௌதம நதி ஓடுகின்ற அற்புதத் தலம். இங்குதான் சத்யவாகீஸ்வரர் அருள்புரிகிறார்.
சீதையை மீட்க வேண்டி இவரை வழிபட்டார் ராமர். அப்போது "சீதை கிடைப்பாள்' என்று சத்தியவாக்கு கிடைத்தது. அதன்படி சீதையை மீட்ட ராமன் மீண்டும் சீதையுடன் இங்கு வந்து வழிபட்டதாக வரலாறு. ராமருக்கு சத்திய வாக்கு கொடுத்ததால் இறைவனும் சத்யவாஹீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அன்னையின் திருநாமம் கோமதி அம்பாள்.
சேர மன்னன் கட்டிய கோயில் இது. மிக உயர்ந்த ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது.
நவநீத கிருஷ்ணர், ஐயப்பன், துர்க்கையம்மன் ஆகியோருக்கும் இங்கே தனி சந்நிதிகள் உள்ளன. சத்யவாஹீஸ்வரரை வழிபட்டால் தொலைந்து போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.