இங்கே கோயில் கொண்ட முருகப் பெருமானை பிற்காலத்தில் ஆண்டிகள் சிலர் வழிபட்டு வந்தனராம். ஒரு முறை தலயாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர் ஒருவர், இந்தத் தலத்தில் தங்கினார். மாலை நேரம்... புனிதத் தீர்த்தத்தில் நீராடி பிறகு முருகனை வழிபட எண்ணிய அவர், அங்கேயிருந்த ஆண்டிகளிடம், "நீராடும் துறை ஏதேனும் இங்கு உண்டோ?' என்று வினவினாராம். அதற்கு அவர்கள், "இங்கே அப்படி தீர்த்தம் ஏதுமில்லை' என்றனராம். அப்போது, ஆண்டிக் கோலத்தில் சிறுவன் ஒருவன் அங்கே எழுந்தருளி, அந்த பக்தரிடம் தானே அந்த தெப்பத்தைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றான். ஓரிடத்தில் தான் கையில் வைத்திருந்த வேலால் நிலத்தைக் குத்திட, அங்கே தீர்த்தம் பொங்கிப் பிரவாகமெடுத்தது. பக்தருக்கோ ஆச்சரியம். அதில் நீராடி, நிமிர்ந்து பார்த்தால், கையில் வேல் கொண்ட வேலனாக, முருகப்பெருமான் காட்சி அளித்தார். அதனால் மகிழ்ந்த பக்தர், தான் கண்ட அழகுக் கோலத்தை தினமும் காண ஆசைப்பட்டார். முருகப் பெருமான் இங்கே பாலசுப்ரமணியராக எழுந்தருளினார்.