ஸ்ரீதட்சிணாமூர்த்தி சந்நிதி: ஞானமா நடராசப் பெருமான், இங்கே உபதேசக் கோலத்தில் குருவாக இருந்து மரப் பொந்தில் அமர்ந்து அருள் புரிந்தார். எனவே சிவன்கோயில்களில் வழக்கமாக அமைக்கப்படும் கோஷ்ட தேவதையாக இல்லாமல், தட்சிணாமூர்த்திப் பெருமான் தனிச் சந்நிதியில் அமைந்தார். என்னதான் சுயம்புவாக லிங்க வடிவில் தோன்றினாலும் பெருமானின் ஞானம் தரும் யோக வடிவழகை தரிசிப்பது சிறப்பல்லவா! அத்தகைய கோலம் தாங்கி இங்கே எழுந்தருளியுள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்திப் பெருமான், குருபகவானுக்கு அதிபதியாயிற்றே. எனவே, இங்கே குருவுக்கு செய்யும் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. வியாழக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் வந்து பெருமானை பூஜிக்கிறார்கள். திருமணத்தடை அகல, குழந்தைகளின் கல்வி சிறக்க, குருவின் பரிபூரண சுபப் பார்வை பெற என அனைத்துக்கும் இங்கே சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறை, சுசீந்திரம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயிலான இந்தக் கோயிலில் ரிக் வேத ஆகம முறைப்படி ஆறு கால பூஜைகள் நடக்கின்றன. சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், ஹோமம் ஆகியவற்றுடன் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறும். சுற்றுவட்டாரத்தில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தி அருள் பெற்றுச் செல்கிறார்கள்.