'அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை' என்பது பொருள் நிறைந்த முதுமொழி. அதாவது "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்துக்கு "ராம்' என்னும் இரண்டெழுத்து எந்த விதத்திலும் குறைவில்லை; இரண்டும் சமசக்தி வாய்ந்தன என்பதே பொருள்.
இந்தக் கலியுகத்துக்கு கைகண்ட அருமருந்து ராமநாம ஜெபமே.
காட்டு வேடன் "ரத்னாகரன்', நாரத முனிவரின் உபதேசம் பெற்று "ராமராம' எனச் சொல்லி பழம்பெரும் இதிகாச பாட்டு நாயகனாக, "வான்மீகி முனிவராக' உயர்ந்தது ராமநாமத்தால்தான்.
பிள்ளைப் பிராயத்தில் கம்பம் கொல்லையைக் காவல் காத்த சிறுவன் கம்பன் ராமபக்தியால் கவிச் சக்ரவர்த்தியாகி இராம காதை பாடியது ராமநாம மகிமையால்தான்.
"ராம்போலோ' என்ற பாச மனிதனை துளசி தாசராக்கி "ராமசரித மானசம்' பாட வைத்தது ராமநாமமே!
சமர்த்த ராமதாசர் சொற்கேட்ட சாதாரண மன்னன் சத்ரபதி சிவாஜியாக சிறந்து இராமபக்தியுடன் காவிக்கொடியுடன் மராட்டிய மாநிலத்தை ஆண்டது ராமநாம மந்திர மகிமையே ஆகும்.
இவை மட்டுமா... இளம் வயதில் "கதாதரன்' என்ற இளைஞன் ராம, கிருஷ்ண மந்திரங்களை இடைவிடாது மொழிந்து பாருலகே வியக்கும்படி "இராமகிருஷ்ண பரமஹம்சராக'த் திகழ்ந்தது ராமநாமத்தால்தான்.
எல்லாவற்றுக்கும் மேலாக நம்மிடையே தியாக வாழ்வு வாழ்ந்த "மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி' "ரம்பா' என்ற பணிப்பெண் மூலம் ராமநாமம் கற்று வாழ்நாள் எல்லாம் ராமநாமம் மொழிந்து தேசப் பிதாவாக தெய்வீக புருஷராக சத்யஜோதியாக "மகாத்மா காந்தி' என்னும் அழியாப் புகழுடன் திகழ்ந்ததும் ராமநாமத்தால்தான்.
இன்றைக்கும் மராட்டிய மாநிலத்தில் "ஆம் ஆம்' என்று சொல்வதற்குப் பதிலாக "ராம் ராம்' என்று சொல்லும் வழக்கம் மக்களிடையே மலர்ந்ததும் ராமநாம மகிமையால்தான்.
""நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராம' என்ற இரண்டெழுத்தினால்''
என்கிறார் கம்பர்.
நாமும் சொல்வோம் ராமநாமம்.