முத்தமிழை மிக விரும்பும் சித்தன் சிவபெருமான்; அவனுக்கு இயல் "இறையனார் அகப்பொருள்' நூல். இசை, வீணை. நாடகம் தில்லை திருநடனம். தென்னாடுடைய செந்தமிழ் நோக்கியே நடராசன் மெல்ல மெல்ல ஆடி வருகிறான்.
தொடக்கத்தில் அவன் ஆடிய இடம் திருக்கயிலை; அடுத்து அவன் ஆடுவது திருவாலங்காடு ரத்தின சபை; இன்னும் கொஞ்சம் தெற்கே வருகிறான்... சிதம்பரம் பொன்னம்பலத்தில் ஆடுகிறான். இதுவும் போதாது; மேலும் மாதவம் செய்த தென்திசை நோக்கிப் பயணம் செய்கிறான். ஆம், மதுரை வெள்ளியம்பலத்தில் விளையாடுகிறான்; பிறகு குற்றாலம் சித்ர சபையில் குமின் சிரிப்புடன் ஆடுகிறான். அடுத்து திக்கெலாம் புகழ் மணக்கும் நெல்லை - செப்பறை தாமிர சபையில் தனிநடம் புரிகின்றான்... ஏன் வடதிசை ஆடிய அருள் அரசன் தெற்கு நோக்கி வருகிறான்? காரணம் என்ன?
அல்லும் பகலும் அனவரதமும் ஆடி ஆடி அம்பலவாணனுக்கு உடம்பு களைத்துப் போய் விட்டது. உள்ளத்திலும் அலுப்பும் சலிப்பும் உண்டாகிவிட்டது. இனி... அவனுக்குக் கவலையே இல்லை.
தெற்கே இருந்து மெல்லென வீசும் தென்றல் காற்றால் அவன் உடல் களைப்பு போய்விட்டது. தென்னாடுடைய சிவனடியார்களின் நிகரிலா சுகமான குளிர் தமிழாய் அவன் மனச் சலிப்பும் நீங்கிவிட்டது.
தென்றல் காற்றாலும், இனிய தமிழாலும் நடராசனின் களைப்பும் இளைப்பும் அலுப்பும் அறவே போய்விட்டன. அவன் அகமும் முகமும் மலர்கிறது. என்னே தென் திசையின் மாட்சி! அங்கேதான் நடராசன் திருக்காட்சி! அடியார்களின் அருந்தமிழ் சொல்லாட்சி!
தெற்கு நோக்கியே வரும் நடராசன் அற்புத நடனத்தை கண் முன் சித்திரிக்கும் திருவிளையாடல் புராணக் கவிதை இதோ...
""கடுக்கவின் பெறு கண்டனும் தென் திசை நோக்கி
அடுக்க வந்து வந்து ஆடுகின்றான்; ஆடலின் இளைப்பு
விடுக்க ஆர மென்கால் திருமுகத்திடை வீசி
மடுக்கவும் தமிழ்ச் சுவை மாந்தவும் அன்றோ''