நிறங்களில் மக்கள் நெஞ்சங்களைக் கவர்வது வெள்ளை நிறமே ஆகும். எனவேதான் தூய சிவபக்தியுடைய திருஞான சம்பந்தர் சீர்காழி பிரம தீர்த்தக் குளக் கரையில், முதல் தேவாரத்தில் வெண்மையைப் போற்றிப் பாடினார்.
காதில் அணியும் தோடு பனை ஓலையால் ஆனது. அது வெள்ளை நிறம். பெருமானின் வாகனம் ரிஷபம்; அதுவும் வெள்ளை நிறம்தான்; "நரை வெள்ளேறு ஒன்றுடையானை' என்பது தேவார வாக்கு. அவர் திருமுடியில் அழகு செய்யும் சந்திரன் வெண்மை நிறம். நிறைவாக அவர் பூசும் திருநீறு விபூதியும் வெள்ளைதான்.
இவ்வண்ணம் வரும் நான்கு சிவப்பொருள்களையும் திருஞான சம்பந்தர் ""தோடுடைய செவியன் விடை ஏறி ஓர்தூவென் மதிசூடி காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்'' என்று முதல் தேவாரத்தில் பாடினார். இத்தகைய சிறப்புடைய தேவாரத்தை திருமயிலையில் வாழ்ந்து வந்த ஒரு சித்தர் எப்பொழுதுமே பாடிக் கொண்டிருப்பார். அவர் இயற்பெயர் யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் இரவு, பகல் பலகாலும் இயலிசை முத்தமிழ் விரகர் திருஞானசம்பந்தரின் "தோடுடைய' பாட்டைப் பாட அதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அந்த சித்தரை "தோபா' சுவாமிகள் என அன்புடன் அழைத்தனர்.
"தோடுடைய செவியன் பாட்டைப் பாடும் சுவாமிகள்' என்பதன் இனிய சுருக்கமே தோபா சுவாமிகள்
என்பதாகும்.
அம்மகானின் சமாதி ஆலயம் "தோபா சுவாமிகள் மடம்' (தாச்சி அருணாசலம் தெரு) என்ற பெயரில் திருமயிலையில் விளங்குகிறது. சம்பந்தரையும், அதைப் பாடிப் பரவிய "தோபா' சுவாமிகளையும் போற்றுவோம்.