வியாச முனிவர் ஆஞ்சநேயருக்காக பல திருக்கோயில்களை எழுப்பியதாக வரலாறு. அவற்றுள் ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டத்திலுள்ள இராவுத்தநல்லூர் என்று அழைக்கப்படும் இரவற்றநல்லூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சஞ்சீவிஇராயர் திருக்கோயில்.
கோயிலின் முன்புறம் வரிசையாக ஏழு ஆஞ்சநேயர்கள். தரிசித்துவிட்டு கோயிலின் உள்ளே சென்றால் கிழக்கு நோக்கி வரதராஜப் பெருமானும், வலக் கரத்தை அபயஹஸ்தமாக காட்டி, இடப்புறத்திலே சௌந்திரிகா மலரினை ஏந்தி, தென்திசையை பார்த்த வண்ணம் ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம்.
ராமருக்கும் இராவணனுக்கும் ஏற்பட்ட போரில் ராமரும் லட்சுமணனும் மயக்கமுற்றனர். அவர்களின் மயக்கத்தைப் போக்க சஞ்சீவி மூலிகை வேண்டும் என்றவுடன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பினைப் போல் புயலாய்ப் புறப்பட்டார் அனுமன். அப்போது வானுக்கும் பூமிக்குமாய் அபய கரம் காட்டி ஆராவமுதன் நிற்பதைக் கண்டார்.
அங்கே வரதராஜனாக நின்ற பரம்பொருள் அனுமனை நோக்கி, ""அதோ நீ தேடி வந்த சஞ்சீவி மலை'' என்று அடையாளம் காட்டினார். ""அனுமனே! நீ இங்கே உன்னைத் தேடி வருபவர்களின் துயரங்களையும், துன்பங்களையும் துடைத்து அருள் புரிய வேண்டும்'' என்று வரதராஜர் கூற, அனுமனும் ஒப்புக்கொண்டு சஞ்சீவிராயராக அருள்புரிகிறார். இக்கோயில் வியாசரால் எழுப்பப்பட்டது என்பது வரலாறு. இரவு - பகல் என்றில்லாமல் இங்கே சஞ்சீவி மூலிகைகளைத் தேடியதால் இவ்வூர் ""இரவற்றநல்லூர்'' என்று அழைக்கப்படுகிறது.
தற்போது ஸ்ரீசஞ்சீவி இராயர் ஆஞ்சநேயர் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயரை வழிபட்டால் தொழில் சிறக்கும், உடல் ஆரோக்யம் சீராகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
மேலும் தகவலுக்கு: 94885 21115.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.