உரிமை வழங்கி வாழ்வோம்!

தற்காலத்தில் எந்த நாட்டிலும் எந்த சமுதாயத்திலும் பெண்களுக்கு சொத்துரிமை இல்லை. நபி(ஸல்) ஏக கொள்கையை எடுத்தியம்பி அடுத்தடுத்து அரும்பண்புகளை அறிவிக்கும் முன் அரேபியாவிலும் இந்நிலையே ஏற்பட்டது.
Updated on
2 min read

தற்காலத்தில் எந்த நாட்டிலும் எந்த சமுதாயத்திலும் பெண்களுக்கு சொத்துரிமை இல்லை. நபி(ஸல்) ஏக கொள்கையை எடுத்தியம்பி அடுத்தடுத்து அரும்பண்புகளை அறிவிக்கும் முன் அரேபியாவிலும் இந்நிலையே ஏற்பட்டது.

எம்பெருமானாரின் எழில் தோழர்களில் ஒருவரான அவ்ஸ் பின் தாபித் அன்சாரி இறந்தார். அவருக்கு ஒரு மனைவியும் இரு புதல்விகளும் இருந்தனர். புதல்வர்கள் இல்லை. அக்கால வழக்கப்படி இறந்தவரின் சிறிய தந்தையின் இரு புதல்வர்கள் ஸீவைது, அர்பஜா ஆகியோர் இறந்தவரின் சொத்துக்களை எடுத்துக்கொண்டனர். இறந்தவரின் மனைவிக்கும் அவரின் பெண் மக்களுக்கும் சொத்தில் எதுவும் கொடுக்கவில்லை.

இறந்தவரின் மனைவி, முஹம்மது நபி (ஸல்)அவர்களிடம் தானும் தனது இரு பெண்களும் உண்ண உணவுக்கும் வழியின்றி துன்புறுவதைத் துயரத்தோடு எடுத்துரைத்தாள். சொத்தை பங்கிட்டுக்கொண்டவர்கள், ஆண்கள் ஈட்டிய சொத்தில் அடுக்களை பெண்களுக்குப் பங்கில்லை என்ற அக்கால வழக்கத்தை வலியுறுத்தி வாதாடினர்.

அப்பொழுது திருக்குர்ஆன் அத்யாயம் 4ல் 7வது வசனம் மூலம், ""பெற்றோர்களோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருட்களிலிருந்து ஆண்களுக்கும் பாகம் உண்டு. குறைந்தாலும் கூடினாலும் அப்பொருட்களிலிருந்து பெண்களுக்கும் பாகம் உண்டு. இது அல்லாஹ்வினால் தெரிவிக்கப்பட்ட பாகமாகும்'' என்று பெண்களுக்கு சொத்தில் பாகம் தந்தது.
இதே அத்யாயத்தில் பாகப் பிரிவினை சட்டம் 11,12 வது வசனங்கள் அருளப்படும் வரை அவ்ஸ் பின் தாபித் அன்சாரி விட்டுச் சென்ற சொத்தை அனுபவிக்காது அச்சொத்தை கைப்பற்றிய ஸýவைது, அர்பஜா தடுக்கப்பட்டனர். பின்னர் ஒரு நிகழ்வின்படியும், 11வது வசனப்படியும் இச்சொத்தும் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

மாநபியின் மற்றொரு தோழர் ஸஅது பின் ரபிஉ அவரின் ஒரு மனைவி, இரு புதல்விகளை விட்டுவிட்டு உஹத் போரில் இறந்தார். அவரின் சொத்துக்களை ஸஅதின் சகோதரர் எடுத்துக்கொண்டார். ஸஅதின் மனைவி, பொருளின்றி படும் துயரத்தையும் பெண்களின் திருமணமும் தடைபடாது நடைபெற வேண்டும் என்ற கவலையையும் நபிகள் (ஸல்)அவர்களிடம் நவின்றார். அப்பொழுதுதான் 4வது அத்யாயத்தில் 11வது வசனம் அருளப்பட்டது.
""உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுடைய பாகம் போன்று உண்டு. எனவே உங்களுக்கு மக்கள் இருவராக அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண்களாக மட்டும் இருந்தால் அப்பொழுது அவர்களுக்கு அவர் விட்டுச் சென்ற சொத்திலிருந்து மூன்றில் இரண்டு பாகம் அவர்களுக்கு உண்டு. மேலும் ஆண் மக்களின்றி ஒரே பெண் மகளாக இருந்தால் அப்பொழுது அவளுக்கு அச்சொத்திலிருந்து பாதி பாகமுண்டு'' என்ற வசனப்படி ஸஅதின் சொத்துக்களில் எட்டில் ஒரு பங்கு மனைவிக்கும், மீதியில் இரு பங்குகள் இரு புதல்விகளுக்கும் ஒரு பங்கு ஸஅதின் சகோதரருக்கும் வழங்கப்பட்டது.

இதே வசனத்தில் இறந்தவரின் தாய், தந்தைக்குரிய பங்கும் கூறப்படுகிறது. இறந்தவருக்குக் குழந்தை இல்லையென்றால் அவருடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் பங்கு உண்டு. 12வது வசனம், மனைவி விட்டுச் சென்ற சொத்தில் கணவனுக்கும் ஆண், பெண் மக்களுக்கும், இறந்தவனின் தாய், தந்தைக்கும் குழந்தை இல்லாமலிருந்தால் இறந்தவளுடன், அல்லது இறந்தவருடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கும் பங்குள்ளதை பாங்காய் அறிவிக்கின்றது.

இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட சொத்துரிமையே பின்னர் எல்லா நாடுகளிலும் பெண்கள் சொத்துரிமை பெற வழி வகுத்தது. நாமும் அண்ணல் நபி(ஸல்) வாழ்ந்து காட்டிய வழியில் பெண்களுக்கு உரிய உரிமைகளை வழங்கி அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com