அடிச்சுவடுகளின் பதிவு!

வாகனங்கள் பெருகிவிட்டன. வாகான சாலைகளில் நடை பாதைகளில் விரிக்கப்படும் விரிவாக்கப்படும் கடைகளால்
Updated on
2 min read

வாகனங்கள் பெருகிவிட்டன. வாகான சாலைகளில் நடை பாதைகளில் விரிக்கப்படும் விரிவாக்கப்படும் கடைகளால் நடைக்கு விடை கொடுக்கும் விபரீதத்தால் விளைவது விபத்து மட்டுமல்ல, ஆபத்தான ஆளை விழுங்கும் ஆட்கொல்லி நோய்களும் நடக்க மறந்ததின் மறுத்ததின் மறு விளைவே.

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு நடந்து வருவதில், தொடர்ந்த பாவங்கள் தொலைந்து அடர்ந்த பலன்களை அடையலாம் என்று அறிவுறுத்தினார்கள்.

மதீனாவில் மஸ்ஜிதுந் நபவிக்கு வெகு தொலைவில் வாழ்ந்த பனூஸலிமா கூட்டத்தினர் நபவிக்கருகிலுள்ள காலியிடங்களில் குடியேற விரும்பினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ""நீங்கள் தொழுகைக்கு நடந்து வரும் அடிச் சுவடுகளுக்கு அதிக நன்மையைப் பெற நாடினால் அங்கேயே தங்கியிருங்கள்'' என்று அறிவுறுத்தினார்கள். அக்கூட்டத்தினரும் அங்கேயே அவர்களின் பழைய இருப்பிடங்களிலேயே தங்கினர் என்று அபூஸ ஈதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிப்பது திர்மிதீ நூலில் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறே விரும்பிய தொலைவிலிருந்த அன்சாரி தோழர்களும், ""அவர்களின் அடிச் சுவடுகளையும் நாம் பதிவு செய்கிறோம்'' என்ற குர்ஆனின் 36:12வது வசனம் வந்ததும் விசனமின்றி அவர்களின் இல்லங்களிலேயே தங்கி மஸ்ஜிதுந் நபவியில் தொழ நடந்தே வந்ததை நவின்ற இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பதிவு முஸ்லிம் நூலில் உள்ளது.

""தொழுபவர்கள் அனைவரிலும் அதிக பலனைப் பெறுபவர் நெடுந்தொலைவிலிருந்து நடந்து வருபவர்'' என்று அபூமூஸô (ரலி) அவர்கள் அறிவித்த நபிமொழி புகாரியிலும் ரஜீனிலும் பதிவாகியுள்ளது.

ஒரு சமயம் நபி தோழர் அனஸ் (ரலி) அவர்கள் ஜைது (ரலி) அவர்களுடன் நடந்து சென்றார்கள்.  ஜைது (ரலி) அவர்கள் மஸ்ஜிதை நோக்கி எடுத்து வைத்து நடக்கும் ஒவ்வொரு காலடிக்கும் நன்மைகள் எழுதப்படுவதை எடுத்துரைத்தது தப்ஸீர் திப்ரீ என்ற நூலில் காணப்படுகிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த புகாரி நூலில் பதிவான அண்ணல் நபி (ஸல்) நவின்ற ""அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டோர் தம்மிடம் வரும் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்'' என்ற நல்லுரைப்படி மறுமையில் நல் விருந்தை நாடி இம்மையில் விருந்தோம்பும் அருந்தவப் பணியை ஆவலுடன் ஆற்றும் மாண்புடைய மதீனாவாசிகள் மதீனாவுக்கு பக்கத்திலிருந்த தனிய்யத்துல் விதாவு என்ற மேடான இடத்திற்கு நடந்து சென்று மதீனாவுக்கு வருவோரை வரவேற்பர். மதீனாவிலிருந்து செல்வோரை அவ்விடம் வரை நடந்து சென்று வழியனுப்புவர். (அறிவிப்பவர் - அஸ்ஸôலி புப்னு யஜீத் (ரலி) நூல்- புகாரி).

பெருமானார் (ஸல்) அவர்கள் பெருநாள் (ஈத்) தொழுகைக்கு ஒரு வழியாக நடந்து சென்று மறு வழியாக நடந்து வீடு திரும்பிய நிகழ்ச்சியை இப்னு உமர்(ரலி) அவர்கள் நினைவுபடுத்தியது அபூதாவூது என்ற நூலில் பதிவாகியுள்ளது.

நடந்து செல்கையில் நடைபாதையில் கிடக்கும் முட்கள், கற்கள், கம்புகளை எடுத்து அப்புறப்படுத்தவும் நடைபாதைகளில் எச்சிலைத் துப்பாது பாதைகளைப் பராமரித்து சுத்தமாய் வைத்திருக்கவும் சத்திய நபி(ஸல்) அவர்கள் உத்தம தோழர்களுக்கு உரைத்தார். அதை நாமும் கடைப்பிடித்து சுற்றுச் சூழல் மாசுபடாது காப்போம். உடல் நலத்தைப் பேணுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com