நம்மைப் படைத்து, காத்து அருளும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக அமைவதே ஆலயங்களில் நடைபெறும் உற்ஸவங்கள். அந்த உற்ஸவங்களில் ஒன்றுதான் "அன்னகூட மகோத்ஸவம்'. "திருப்பாவாடை உற்ஸவம்' என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த உற்ஸவம் பெரும்பாலும் வைணவ ஆலயங்களில் நடைபெறுவது வழக்கம். அன்று பெருமாளின் சந்நிதியில் அவர் முன்பு சித்ரான்னங்கள் எனச் சொல்லப்படும் பல்வேறு அன்ன வகைகளையும், பட்சண வகைகளையும், பழங்கள், காய்கறிகள் என அனைத்தையும் அழகாக வரிசைப்படுத்தி வைத்து படைப்பார்கள். சாற்றுமுறை, வேத திவ்ய பிரபந்த பாராயணங்களுடன் நிவேதனம் செய்துவிட்டு பின்பு அனைத்து பக்தர்களுக்கும் வழங்குவார்கள். (சிவாலயங்களில் நடைபெறுவது அன்னாபிஷேகம். அங்கு சிவபெருமானின் லிங்கத் திருமேனி முழுவதும் அன்னத்தால் அலங்கரித்திருப்பார்கள்). பகவான் கண்ணன் கோவர்த்தன கிரிதரனாக இருந்த பொழுது அவன் அருளிய வண்ணம் பல்வேறு உணவுகள் படைக்கப்பட்டு கோவர்த்தனகிரிக்கும் (மலைக்கும்), பசுக்கள், பிற விலங்குகள்,வேதியர்கள், ஆயர்கள் ஆகியோருக்கும் வழங்கப்பட்டதாம். இன்றும் கோவர்த்தன பூஜை வட மாநிலத்தில் பிருந்தாவனத்திலும், பிற ஆலயங்களிலும் நடத்தப்பட்டு, உணவு பெரும் அளவில் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இது "அன்னகூடம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த அன்னகூட மகோத்ஸவம் திருவள்ளூர் மாவட்டத்தில், பேரம்பாக்கம் அருகில் உள்ள அருள்மிகு மரகதவல்லி சமேத ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் டிச: 1 ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. மிகப் பழமையான இத்திருக்கோயிலில் ஏழரை அடி உயரத்தில் நரசிம்மர் சேவை சாதிக்கிறார். மகாலட்சுமியை இடது தொடை மீது அமர்த்தி, ஒருவருக்கொருவர் அணைத்தபடி வீற்றிருந்த கோலத்தில் அருள்கிறார். மேலும் தாயாரின் பார்வை முழுவதும் சேவார்த்திகள் மீது விழுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு. கார்த்திகை மாதம் நரசிம்மர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. நரசிம்மரின் சுவாதி நட்சத்திரத்தன்று இந்த அன்னகூட உற்ஸவம் நடைபெறுவது விசேஷம்.
தகவலுக்கு: 94425 85638
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.