வாமன அவதாரத்தின்போது மகாவிஷ்ணுவுக்கு தானம் கொடுக்கவிருந்த மகாபலியை தடுக்கும் எண்ணத்துடன், அசுர குரு சுக்ராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியிலிருந்து தண்ணீர் வரும் வழியை அடைத்தார். அதை அறிந்த மகாவிஷ்ணு தர்ப்பையால் குத்தினார். இதனால் வண்டு உருவத்தில் இருந்த சுக்ராச்சாரியாரின் பார்வை பறிபோனது. பார்வையை இழந்த சுக்ராச்சாரியார் பிழை பொறுத்தருளுமாறு வேண்ட, திருமாலும் ""பூலோகத்தில் வெள்ளி நிலவென இரவிலும் வெளிச்சத்துடன் திகழும் தலத்தில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) தங்கியிருந்து சிவபெருமானைத் தொழுது வா.
பார்வை கிடைக்கப் பெறுவாய்'' என அருளினார். அவ்வாறு சுக்கிரன் தவமிருந்து பார்வையைத் திரும்பப் பெற்ற இடம்தான் திருவெள்ளியங்குடி என்னும் பார்க்கவபுரம். இவ்வாறு மகேஸ்வரனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்து அருளிய இத்திருத்தலம் கும்பகோணம் அருகில் திருப்பணந்தாள் என்ற இடத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. கண் பார்வை கோளாறுகள் நீக்கும் தலமாகவும், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இறைவனின் திருநாமம் ஸ்ரீசோழீஸ்வரர். அம்பாள் ஸ்ரீசௌந்தரநாயகி என்று அழைக்கப்படுகிறாள். இங்கு சுக்கிர தீர்த்தம் உள்ளது.
காஞ்சி மகாபெரியவர் ஒரு மண்டலம் இத்திருத்தலத்தில் தங்கி பூஜை, வழிபாடுகள் செய்துள்ளார். இங்குள்ள திருமால் ஆலயம் சோழநாட்டு 40 திவ்ய தேசங்களில் 29வது திருப்பதியாக போற்றப்படுகிறது. இங்கு ஸ்ரீகோலவிழிராமர் திருச்சந்நிதியில் சுக்கிராச்சாரியார் ஏற்றி வைத்த தீபம் அணையா தீபமாக எரிந்துகொண்டிருப்பதாக ஐதீகம்.
தற்போது முற்றிலும் சிதிலமடைந்துள்ள சோழீஸ்வரர் ஆலயத்திற்கு இந்து சமய அறநிலையத் துறை ஒத்துழைப்புடன் திருப்பணி நடைபெறுகிறது. வருகிற நவம்பவர் 14ஆம் தேதி குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தகவலுக்கு: 98400 53289
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.